ஓமிக்ரான் வைரஸ் அச்சம்.. இந்தியாவில் எந்தெந்த மாநிலத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள்?
டெல்லி : ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மாநிலங்கள் விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கோவிட் பரிசோதனை கட்டாயம் என மாநில அரசுகள் தெரிவித்துள்ளது.
இதனால் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள் கொரோனா கட்டுப்பாடு விதிகள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை மக்கள் கவனத்திற்கு... நாளை பல்வேறு பகுதியில் மின்தடை!
பி 1.1.529 ஒமைக்ரான்
ஓமிக்ரான் பி 1.1.529 எனும் 30 மடங்கு உருமாறிய கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலியில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் சர்வதேச விமானப் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. முக்கியமாக தென்னாப்பிரிக்காவில் இருந்து விமானங்கள் வருவதற்கு தடை விதித்துள்ளன.
பிரதமர் தலைமையில் கூட்டம்
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய வகை வைரஸை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கூறினார். ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கி உள்ளதால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு இந்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கோவிட் பரிசோதனை செய்யுமாறு,மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மாநிலங்கள் கட்டுப்பாடு
மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவில் மாநில அரசுகள் ஓமிக்ரான் பாதிப்பு உடையவர்கள் மாநிலத்திற்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வரிசையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, மற்றும் குஜராத் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான பயணகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து அது தொடர்பான விதிமுறைகளை வெளியிட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் கட்டுப்பாடுகள்
கொரோனாவின் முதல் மற்றும் 2வது அலையில் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று நவம்பர் 27ம் தேதி மகாராஷ்டிர அரசு விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கொரோனாவுக்கு எதிரான மகாராஷ்டிரா அரசின் அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றவேண்டும். இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிராவிற்குள் நுழையும் பயணிகள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆர்டி பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவு வரும் வரை தனிமைப்படுத்தப்படுவர். கார், ஆட்டோ, பேருந்து உள்பட அனைத்து வாகன ஓட்டுநர்களோ அல்லது பயணிகளோ கண்டிப்பாக கொரோனா விதிகளை பின்பற்றவேண்டும். அப்படி இல்லாவிடில் ஓட்டுநர் அல்லது கண்டக்டருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தனியார் பேருந்துகளில் கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டால் நிறுவன உரிமையாளருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
கர்நாடகாவில் புதிய கட்டுப்பாடுகள்
கர்நாடக அரசு வெளியிட்டுள்ள கொனோ வழிகாட்டு நெறிமுறைகளில், தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா மற்றும் ஹாங்காங்கில் இருந்து கர்நாடக மாநிலம் வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டி பிசிஆர் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்தபிறகே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கர்நாடக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் கடந்த 15 நாட்களில் தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா மற்றும் ஹாங்காங்கில் இருந்து கர்நாடக மாநிலம் வந்த பயணிகள் தங்கியிருக்கும் இடம் கண்டறியப்பட்டு அவர்கள் கோவிட் 19 டெஸ்ட் எடுத்து சான்றிதழ் தருமாறு அறிவுறுத்தப்படுவார்கள் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. ஒருவேளை அவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டால் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உருவான ஓமிக்ரான் தொற்று பரவக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
குஜராத் மாநிலத்தில் கட்டுப்பாடுகள்
இதேபோல் குஜராத் அரசும் ஐரோப்பா உள்பட 11 நாடுகளில் இருந்து குஜராத் வரும் விமானப் பயணிகள் கட்டாயம் ஆர்டி பிசிஆர் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. அதாவது பிரிட்டிஷ், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு கோவிட் டெஸ்ட் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.