தமிழகம் உள்பட 5 முன்னணி மாநிலங்களில் குறைந்த கொரோனா பாதிப்பு.. அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் லிஸ்ட்
டெல்லி: நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த முக்கிய 5 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக சரிவை சந்தித்து வருகிறது. இதனால் மாநில அரசும் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
இந்தியாவில் 57 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 91 ஆயிரம் பேர் கொரோனாவால் இறந்துவிட்டனர். இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலத்தில் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அடுத்த இடத்தில் ஆந்திராவும் அதற்கு அடுத்த இடத்தில் தமிழகமும், கர்நாடகமும் , உத்தரப்பிரதேசம் ஆகியவை உள்ளன.
மகாராஷ்டிராவில் 12 லட்சம் பேரும் ஆந்திராவில் 6.46 லட்சம் பேரும், தமிழகத்தில் 5.57 லட்சம் பேரும், உத்தரப்பிரதேசத்தில் 5.40 லட்சம் பேரும் உத்தரப்பிரதேசத்தில் 3.69 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேற்கண்ட 5 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் கட்டுக்குள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த இரு வாரங்களை வைத்து பார்க்கும் போது ஆந்திராவில் 30 சதவீதம் அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. செப்டம்பர் 10-ஆம் தேதி வரை நாள்தோறும் 10 ஆயிரம் பேர் வரை புதிதாக பாதிக்கப்படும் நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அதாவது 10 ஆயிரத்தில் இருந்து அவை 8 ஆயிரமாக குறைந்து வருகிறது. அதே வேளையில் நோயிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக 10 ஆயிரத்தை விட அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் ஒரு தினசரி புதிய தொற்று விகிதம் 2.5 சதவீதமாக இருந்த நிலையில் அது 1.25 சதவீதமாக குறைந்துவிட்டது.
மகாராஷ்டிராவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 10 சதவீதமாக குறைந்துள்ளது. அது போல் தமிழகம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனையில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ஒரு நாளைக்கு 9.81 லட்சம் சளி மாதிரிகள் சோதனை செய்யப்படுகிறது. ஆனால் 10 நாட்களுக்கு முன்பு 10.94 லட்சம் சளி மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
அது போல் கடந்த ஒரு வாரமாக குணமடைந்து வீடு திரும்பும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. ஆந்திராவில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்போரை காட்டிலும் கொரோனாவிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 70, 357 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.