இதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10000த்தை கடந்தது! உயிரிழப்பும் 350ஐ தாண்டியது
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 350ஐ கடந்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக நாடு முழுவதும் 10453 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 8902 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 1193 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ள பகுதிகளை வகைபிரித்து நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் வண்ணக் குறியீடு செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது 15 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகள் சிவப்பு நிறத்திலும், அதற்கு கீழ் உள்ள மாவட்டங்கள் ஆரஞ்சு நிறத்திலும், கொரோனா இல்லாத மாவட்டங்கள் பச்சை நிறத்திலும் வகைப்படுத்தப்பட உள்ளன.
கொரோனா பாதிப்பு
இந்த வண்ண குறியீட்டு முறையால் நாடு கிட்டத்தட்ட பாதி ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறமாக இருக்கும். மார்ச் 29 அன்று 160 ஆக இருந்த கொரோனா பாதிப்பு மாவட்டங்களின் எண்ணிக்கை, ஏப்ரல் 6 அன்று 284 ஆகவும், தற்போது 364 மாவட்டங்களாகவும் உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு 2வது இடம்
நாட்டிலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களாக மகாராஷ்டிரா (2334), டெல்லி (1,510), தமிழ்நாடு (1,173), ராஜஸ்தான் (897) மற்றும் மத்திய பிரதேசம் (614) குஜராத்தில் (592) போன்றவை உள்ளன. மகாராஷ்டீராவில் இன்று ஒரே நாளில் 352 பேருக்கும், டெல்லியில், இன்று ஒரே நாளில் 354 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டும் 10 புதிய கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்கள் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் நாட்டின் தலைநகரான டெல்லியில் மொத்த ஹாட்ஸ்பாட்களின் எண்ணிக்கையை 43 ஆக உயர்ந்துள்ளது.
மதக்கூட்டம் காரணம்
இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஒரு மதக் கூட்டத்துடன் தொடர்புடையாக கூறப்படுகிறது. அந்த இடம் தான் தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவுவதற்கான முக்கியமான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
நூற்றாண்டில் இல்லாதது
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று மற்றும் நாடு தழுவிய ஊரடங்கு ஆகியவை பொருளாதாரத்தில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. நடப்பு நிதியாண்டில் இந்தியா வெறும் 1.5-2.8 சதவீத வளர்ச்சியைக் காணும் என்று உலக வங்கி கணித்துள்ளது - இந்த தொற்றுநோய் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாகவும், இதில் இருந்து வெளியே வர கடினமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது,
மோடி பேசுகிறார்
இதற்கிடையே மகாராஷ்டிரா, தமிழகம் , ஒடிஸா, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்கள் ஏப்ரல் மாத இறுதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளன. ஆனால் பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு ஊரடங்கை நாடு முழுவதும் நீட்டிப்பது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். அப்போது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக சில அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.