அமீரகம் & மாலத்தீவில் சிக்கி இருக்கும் இந்தியர்கள்.. மீட்பதற்கு புறப்பட்ட 3 போர் கப்பல்கள்.. அதிரடி
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மாலத்தீவில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்க மூன்று போர் கப்பல்கள் இந்திய கடற்படை சார்பாக அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மாலத்தீவில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்க மூன்று போர் கப்பல்கள் இந்திய கடற்படை சார்பாக அனுப்பப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வரும் முடிவில் மத்திய அரசு களமிறங்கி உள்ளது. ஏற்கனவே ஊரடங்கிற்கு முன்பாக ஏர்இந்தியா விமானங்கள் மூலம் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியாவிற்கு மீட்டு அழைத்து வரப்பட்டனர்.

இதை தொடர்ந்து அடுத்த கட்ட மீட்பு பணிகள் வரும் 7ம் தேதி தொடங்க உள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை இதன் மூலம் மீட்க உள்ளனர். மொத்தமாக 19 லட்சம் இந்தியர்களை மீட்க இந்த திட்டம் போடப்பட்டுள்ளது. அதிகமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பலர் மீட்கப்பட உள்ளனர்.
ஈரான், சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்கள் பலர் சிக்கி தவிக்கிறார்கள். இதில் பெரும்பாலானோர் தங்கள் வேலையை இழந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களை மீட்டு இந்தியாவிற்கு பாதுகாப்பாக அழைத்து வர உள்ளனர். இதற்காக போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை மத்திய அரசு அனுப்ப உள்ளது.
அதன் ஒரு கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மாலத்தீவில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்க மூன்று போர் கப்பல்கள் இந்திய கடற்படை சார்பாக அனுப்பப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து ஐஎன்எஸ் ஐலஷ்வா கப்பல் மற்றும் ஐஎன்எஸ் மாகர் ஆகிய கப்பல்கள் மாலத்தீவிற்கு சென்று உள்ளது.
அதேபோல் இன்னொரு பக்கம் ஐஎன்எஸ் ஷர்தூல் துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மூன்று கப்பல்களும் அடுத்த வாரம் கொச்சிக்கு மீண்டும் திரும்பி கொண்டு வரப்படும். அங்கு வந்த பின் பயணிகள் எல்லோரும் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஐஎன்எஸ் மாகர், ஐஎன்எஸ் ஷர்தூல் ஆகியவை கடற்படையின் தென் பிரிவை சேர்ந்த போர் கப்பல்கள் ஆகும் . ஐஎன்எஸ் ஐலஷ்வா கிழக்கு பிரிவை சேர்ந்த கப்பல் ஆகும்.












Click it and Unblock the Notifications