கொரோனா தாக்குதல் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு- 13,33,728 மனித உயிர்களை காவு கொண்டு கோரத்தாண்டவம்!
டெல்லி: உலக நாடுகள் அனைத்திலும் 365 நாட்களில் 13,33,728 மனித உயிர்களை காவு வாங்கி ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் மரணத்தை கண்முன்னே காட்டிக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ்.
2019-ம் ஆண்டு இதே நவம்பர் 17-ல் கொரோனா வைரஸ் சீனாவுன் வூஹான் மாகாணத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்டது. முதல் 1 மாத காலம் கொரோனா பரவல் குறித்த பேரச்சம் எதுவும் இல்லை.
அதன்பின்னர் தான் உலகையே பேரழிவுக்குள்ளாக்கப் புறப்பட்ட ஆட்கொல்லி கொடூர தொற்று கொரோனா என்பதை உலகம் உணர்ந்து கொண்டது. அதற்குள் ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் கோரத்தாண்டவம் உச்சத்தை எட்டியது.

கொரோனா கோரமுகம்
உலகின் பல நாடுகள் முதல் முறையாக லாக்டவுனை அறிவித்தன. உலக நாடுகள் பெரும்பாலும் தங்களது இயல்பு வாழ்க்கையை வீடுகளுக்குள் முடக்கி வைத்தது. அந்த அளவுக்கு கொரோனோ எனும் பெருந்தொற்றின் வேட்டை வேகம் அதிகமாக இருந்தது., கொத்து கொத்தாக வீதிகளில் மரணித்துப் போனார்கள். அட்டக்கம் செய்ய இடம் கிடைக்காமல் தத்தளித்துப் போன நாடுகள் உண்டு.

பேரழிவில் அமெரிக்கா
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காதான் உலகிலேயே அதிகமான பேரழிவை எதிர்கொண்டது. அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஐரோப்பிய நாடுகள் தொடக்கத்தில் குலைநடுங்கிப் போயின. பின்னர் மெல்ல மெல்ல ஐரோப்பிய நாடுகள் இதன் பிடியில் இருந்து மீள இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கின.

ஐரோப்பாவில் மீண்டும் ஆட்டம்
எந்த ஒரு தேசமுமே எண்ணிப்பார்க்கவே முடியாத பொருளாதார இழப்பு, மனித உயிர்கள் இழப்பு.. என அத்தனையையும் உலகம் எதிர்கொண்டே இருக்கிறது. இப்போது மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் அடுத்த கட்ட வேட்டையும் ஆட்டமும் தொடங்கிவிட்டது. இந்த கொரொனா வைரஸ் பூமிப்பந்தில் மனிதர்களை வேட்டையாட தொடங்கி 365 நாட்களாகிவிட்டது.

கொரோனா மருந்து
இதுவரை மொத்தமாக 13,33,728 பேரை காவு வாங்கி இருக்கிறது. இன்னமும் கொத்து கொத்தாக பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை குடித்துக் கொண்டே இருக்கிறது. எத்தனையோ மகத்தான மனிதர்களை எல்லாம் இந்த கொரோனா எனும் கோரன் கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டான். ஆனால் இதில் வேதனைக்குரியது என்னவெனில் இன்னமும் இந்த மனிதர்கள் கொரோனாவை தடுக்க மருந்து கண்டுபிடிக்காமல் இருப்பதுதான்.

கொரோனாவை விரட்ட சூளுரை
விஞ்ஞானத்தின் அதி உச்சம், விண்வெளியையே விலைபேசுகிறோம் என்றெல்லாம் மார்தட்டிய மனிதர்களின் முகத்தில் ஒவ்வொருநாளும் அறைந்து கொண்டே இருக்கிறது இந்த கொரோனா. கொரோனாவை முன்வைத்து அரசியல் கூத்துகளை ஒவ்வொருநாடும் அரங்கேற்றிய போதும். இனியேனும் எஞ்சிய மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கான வழியை கண்டுபிடிப்போம் என்பதே இன்றைய கொரோனா பிறந்த நாள் சூளுரையாக இருக்கட்டுமே!












Click it and Unblock the Notifications