லாக்டவுன் போட்டு ஓராண்டு ஓடிப்போச்சு.. இன்னும் கொரோனா போகலியே!
டெல்லி : இந்தியாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொரோனா தொற்று பரவ துவங்கியது. தொடர்ந்து தொற்று பரவல் அதிகரித்து, உயிரிழப்புக்கள் அதிகரித்ததன் காரணமாக மார்ச் 24 முதல் 21 நாட்கள் கடும் கட்டுபாடுகளுடன் நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
நள்ளிரவு 12 மணி முதல் லாக்டவுன் அமலுக்கு வருவதாக, 4 மணி நேரத்திற்கு முன் இரவு 8 மணிக்கு டிவி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மோடி அறிவித்தார்.
பிரதமரின் அறிவிப்பை அடுத்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கடைகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தொழில்கூடங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.
முதலில் 21 நாள் லாக்டவுன்
பொது நலனுக்காக 21 நாட்கள் தானே என மக்கள் லாக்டவுனை வரவேற்றனர். ஆனால் தொடர்ந்து அது நீட்டிக்கப்பட்டுக் கொண்டே சென்றது. இதனால் அனைத்து துறை தொழிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டதால், மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற கூட மிகக் கடுமையாக அவமதிப்பட்டனர்.
இதுவரை கணக்கு தெரியவில்லை
லாக்டவுனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொழில்கள் முடக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்ப நினைத்தவர்களுக்கு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது பெரும் சவாலாக ஆனது. இதனால் பலர் நடந்தே சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டனர். இப்படி சென்றவர்கள் வாகனங்களில் அடிப்பட்டும், ரயில் தண்டவாளங்களில் தூங்கியவர்கள் சரக்கு ரயில்களில் அடிபட்டும் உயிரிழந்தனர். இப்படி எத்தனை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற சரியான கணக்கு இதுவரை தெரியவில்லை.
500 லிருந்து 3 லட்சம்
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் 24 ம் தேதி லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட போது 500 பேர் மட்டுமே கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் தற்போது 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டடுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
வேலையிழப்பு விகிதம்
லாக்டவுனால் ஏராளமானோர் வேலை இழந்தனர். லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட போது 8.8 சதவீதமாக இருந்த வேலையில்லாதோர் விகிதம், இந்த ஆண்டு பிப்ரவரியில் 6.9 சதவீதமாக குறைந்து, மார்ச்சில் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் பாதிப்பில் இருந்து முழுவதும் நாடு மீளாத நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்க உள்ளது.
மீண்டும் லாக்டவுன்
மீண்டும் கொரோனா உச்சம் தொட்டு வருவதால் டில்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள், சினிமா தியேட்டர்கள், மால்கள் மூடப்பட்டு வருகின்றன. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,68,457 ஆக உள்ளது.
நாடு முழுவதும் நீட்டிக்கப்படுமா
எத்தனை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டாலும், தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் விரைவில் நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார்.