ரெம்டெசிவிர் மருந்துகள் கொரோனாவை கட்டுப்படுத்தக் கூடியதா? கள்ளச் சந்தையில் கொடிகட்டிப் பறப்பது ஏன்?
டெல்லி: நாட்டில் கொரோனா பரவல் உச்சகட்டமாக தாக்கி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசிகளுக்கு அப்பால் ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ளச்சந்தைகளில் பதுக்கப்படுவது அதிகரித்துள்ளது. ரெம்டெசிவிர் மருந்துகள் கொரோனாவை கட்டுப்படுத்தக் கூடியதா? என்கிற கேள்வி மிக இயல்பானது.
- உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் 265 ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்துகளை சட்டவிரோதமாக கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 3 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
- பெங்களூருவில் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி. பொதுவாக ரூ5,400-க்கு விற்கக் கூடிய ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ள சந்தையில் ரூ40,000 வரையில் விற்பனை செய்யப்படுகிறதாம்.
- ரெம்டெசிவிர் மருந்துகள் கிடைக்காததைக் கண்டித்து புனேவில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்
- மகாராஷ்டிராவில் ரெம்டெசிவிர் மருந்துகள் கிடைக்காத விரக்தியில் பத்திரிகையாளர் ஒருவர் தற்கொலை.
- ரெம்டெசிவிர் மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை
இப்படித்தான் கடந்த சில வாரங்களாக ரெம்டெசிவிர் மருந்துகள் பற்றி ஏராளமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ரெம்டெசிவிர் மருந்து என்றால் என்ன? முக்கியத்துவம் என்ன?
நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்டு போடப்பட்டு வருகின்றன. இதனுடன் சேர்ந்து 3-வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியும் இணைய உள்ளது. இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கும் கொரோனாவுக்கும் என்ன சம்பந்தம்? ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு இப்படியான தட்டுப்பாடு ஏன்?
ரெம்டெசிவிர் என்பது ஆப்பிரிக்காவில் பேரழிவை உருவாக்கிய எபோலா வைரஸை அழிக்க கண்டுபிடிக்க ஒரு மருந்து. இந்த மருந்தை கொரோனா நோய் சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம் என்பது பொதுவான கருத்து. அமெரிக்காவும் இந்த ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.
கொரோனா அதிகரிப்பு : தஞ்சை பெரியகோவில், நாமக்கல் நரசிம்மர், கங்கை கொண்ட சோழபுரம் கோவில்கள் மூடல்
கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு தொற்று பரவல் தீவிரமாவதைத் தடுக்கும் தன்மை கொண்டது ரெம்டெசிவிர். இதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொரோனா பாதித்தவர்கள் செல்வதை தவிர்க்க வாய்ப்புகள் அதிகம்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த போது ரெம்டெசிவிர் மருந்துகள் முக்கியப் பங்கு வகித்தன. இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தில் கொரோனா முதல் அலையில் கணிசமான உயிர்களைக் காப்பாற்றி உயிரிழப்புகளைத் தவிர்த்ததில் இந்த ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு முதன்மை பங்கு உண்டு.
பொதுவாக கொரோனா பாதித்த அனைவருக்கும் இந்த ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க தேவையில்லை. கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த ரெம்டெசிவிர் மருந்துகள் கொடுத்தால் பயன் தரக் கூடியதாக இருக்கும்.
ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏன்?
கொரோனா முதல் அலை தாக்கம் ஓய்ந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்துகள் மிக சாதாரணமாக அதிகபட்சம் ரூ2,500 வரையில் கிடைத்துவந்தன. ஆனால் அண்மையில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்த நிலையில்தான் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு தட்டுப்பாடு என்கிற பிரச்சனையே எழுந்தது. அதாவது மகாராஷ்டிராவுக்கு ரெம்டெசிவிர் மருந்துகள் அதிகம் தேவை என்பதால் செயற்கையான தட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டு கறுப்பு சந்தைகளுக்குள் இது கொண்டு செல்லப்பட்டன.
மகாராஷ்டிராவை தொடர்ந்து பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க, ரெம்டெசிவிர் மருந்துகளின் தேவையும் அதிகரித்தது. இதனால் இந்த மருந்துகள் கறுப்புச் சந்தைகளில் கொடிகட்டிப் பறந்தன. இதன் விளைவாகத்தான் ஒரு டோஸ் மருந்து ரூ40,000 என்ற நிலையும் உருவானது; ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கடத்துகிற நிலைமை, மருந்து கிடைக்காமல் தற்கொலை என்கிற நிலையும் உருவானது.
என்னதான் செய்ய வேண்டும்?
குஜராத் உயர்நீதிமன்றம்தான் இந்த விவகாரத்தில் சரியான கருத்தை முன்வைத்தது. ரெம்டெசிவிர் மருந்துகள் கொரோனாவை கட்டுப்படுத்தக் கூடிய மருந்து அல்ல; கொரோனாவால் மிக மோசமான பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மட்டுமே தரக் கூடிய மருந்து என்பதை உள்வாங்கி கொள்ள வேண்டியதும் அவசியம். மருந்து நிறுவனங்களும் இந்திய சூழ்நிலை மற்றும் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு ரெம்டெசிவிர் மருந்துகளை போர்க்கால அடிப்படையில் அதிக அளவில் தயாரித்தாக வேண்டியதும் கட்டாயமாகும்.