24 x 7 இயங்கும் மயானங்கள்.. உடலுடன் 20 மணி நேரம் காத்திருக்கும் உறவினர்கள்.. டெல்லியின் பரிதாபம்!
டெல்லி: டெல்லியில் தினமும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தகன மேடைகள் 24 மணி நேரமும் பிசியாக உள்ளதால் உடல்களை தகனம் செய்ய 20 மணி நேரம் காத்து கிடக்கும் நிலை நீடித்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அடங்காமல் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் தலைநகர் டெல்லியின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது.
பற்றாக்குறை இல்லை... உ.பியில் ஆக்சிஜன் நிரப்ப மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள் - உண்மை இதுதான்
கொரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள் இல்லை. இதனால் ஏராளாமான நோயாளிகள் மருத்துவமனைகளின் வெளியே சாலைகளில் காத்து கிடக்கின்றனர்.
தொடர் மரணங்கள்
இது தவிர அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் தினமும் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக டெல்லியில் தினசரி 350-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. இந்த மாதத்தில் மட்டும் 3,601 பேர் இறந்துள்ளனர், இப்படி பரிதாபமாக உயிரிழப்பவர்களை கூட நல்ல முறையில் அடக்கம், தகனம் செய்ய முடியாமல் டெல்லி அரசு மிகவும் திணறி வருகிறது.
திணறும் தகன மேடைகள்
தினமும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் டெல்லியில் உள்ள தகன மேடைகள் 24 மணி நேரமும் பிசியாக உள்ளன. டெல்லியில் மொத்தம் 25-க்கும் மேற்பட்ட தகன மேடைகள் உள்ளன. ஆனால் பெருகி வரும் உடல்களை சமாளிக்க இந்த தகன மேடைகள் போதுமானதாக இல்லை. இதனால் ஏற்கனவே உள்ள தகன மேடைக்கு அருகிலேயே கொஞ்சம் இடம் விட்டுவிட்டு உடல்களை தகனம் சேர்த்து வருகின்றனர்.
டோக்கன் முறை
வழக்கமாக 22 உடல்களை மட்டும் கையாளும் சாராய் காலே கான் என்ற இடத்தில் உள்ள தகன மேடையில் ஒவ்வொரு நாளும் சுமார் 60-70 உடல்கள் கையாளப்படுகின்றன. ஒரு பெரிய தகன மேடையில் மட்டும் ஒரே நேரத்தில் 50 உடல்கள் எரியூட்டப்படுகின்றன. 24 மணி நேரமும் உடல்கள் வந்து கொண்டே இருப்பதால் சில தகன மேடைகளில் டோக்கன் முறை கடைபிடிக்கப்டுகிறது.
20 மணி நேரமாகிறது
மருத்துவமனைகளில் இருந்து உடல்களை கொண்டு வரும் ஆம்புலன்ஸ்கள், ஆட்டோக்கள், கார்கள், அமரர் ஊர்தி உள்ளிட்ட வாகனங்கள் மயானங்களின் முன்பு நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றன. சில இடங்களில் இந்த வாகனங்களை நிறுத்துவதற்கு கூட இடமில்லை. இறந்தவர் ஏழையானாலும் சரி, பணக்காரர் ஆனாலும் சரி ஒருவரின் உடலை தகனம் செய்ய சுமார் 20 மணி நேரம் வரை ஆகிறது. இப்படி காத்து கிடந்தும் தகன மேடைகளில் இடம் கிடைக்காததால் பெரும்பாலானோர் புறம்போக்கு நிலங்களில் உடல்களை எரித்து வருகின்றனர்.
இறுதிச்சடங்கு செய்பவர் உருக்கம்
''டெல்லியில் இதுபோன்ற மோசமான சூழ்நிலையை நான் என் வாழ்க்கையில் இதற்கு முன்பு பார்த்ததில்லை. மக்கள் உயிரிழந்த தங்கள் அன்புக்குரியவர்களுக்கு இறுதி மரியாதை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து டெல்லி தகன மேடைகளும் இறந்த உடல்களால் நிரம்பி வழிகின்றன'' என்று இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளும் ஒருவர் தெரிவித்தார்.