கொல்கத்தாவில் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் குளறுபடி! நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஜாமின் மனு தள்ளுபடி
கொல்கத்தா: பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி நேற்று கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்திற்கு வந்திருந்தார். ஆனால், அங்கு அவர்கள் கொஞ்ச நேரம் கூட இல்லாததால், டென்ஷனான ரசிகர்கள் ரகளையில் இறங்கினர். இந்த விவகாரம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார். தற்போது அவருடைய ஜாமீன் மனு தள்ளபடி செய்யப்பட்டிருக்கிறது.
நேற்று மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவுக்கு வந்திருந்தார். கொல்கத்தாவில் தனது உருவ சிலையை திறந்து வைத்த அவர், பின்னர் சால்ட் லேக் மைதானத்திற்கு வந்தார். அவரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஆனால், மெஸ்ஸி 10 நிமிடம் கூட முழுமையாக கிரவுண்டில் இல்லை. எனவே ரசிகர்கள் மைதானத்தில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.

இந்த வழக்கில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் ஜாமின் கோரியிருந்த நிலையில் தற்போது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் மோசமான நிர்வாகச் சீர்கேடு காரணமாக ரசிகர்கள் கட்டுக்கடங்காத கோபமடைந்து வன்முறையில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது.
மெஸ்ஸி சுற்றுப்பயணத்தின் முக்கிய அமைப்பாளரும் விளம்பரதாரருமான சதாரு தத்தாவை, நேற்று மாலை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். அடுத்த நிகழ்விற்காக ஹைதராபாத் செல்ல விமானத்தில் ஏற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு மெஸ்ஸி மற்றும் சிலருடன் தத்தா சென்றபோது, டிஜிபி தத்தாவை தடுத்து கைது செய்தார். இன்று காலை, தத்தா பிதான்நகர் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், தத்தாவுக்கு ஜாமின் வழங்க மறுத்து, 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் தன் கட்சிக்காரர் சிக்கவைக்கப்பட்டுள்ளதாகவும், கைது அவரது பிம்பத்திற்கு களங்கம் விளைவிப்பதாகவும் தத்தாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆனால், காவல்துறை தரப்பு, எந்தவொரு நிர்வாகச் சீர்கேடும் இல்லாமல் நிகழ்வுகளைச் சீராகத் திட்டமிடுவது அமைப்பாளர்களின் பொறுப்பு என வாதிட்டது. நட்சத்திர வீரரின் வருகைக்கு போதுமான ஏற்பாடுகளைச் செய்ய அமைப்பாளர்கள் தவறிவிட்டனர் என்பதை முதல் கட்ட ஆதாரங்கள் வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். நிகழ்வின் பெரும் தோல்விக்கு எந்தப் பொறுப்பையும் ஏற்க மறுத்த தத்தா, டிக்கெட் பணம் ரசிகர்களுக்குத் திரும்ப கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications