ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா.. ஐரோப்பியாவில் திடீரென உயரும் கேஸ்கள்.. விரைவில் அடுத்த அலை?
டெல்லி: ஐரோப்பாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது, அதேபோல புதிய உருமாறிய கொரோனாவும் போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது அடுத்த அலையை ஏற்படுத்துமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச பயணிகளை அனுமதிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
ஆப்பிரிக்காவிலும் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு எந்தளவு சரியானதாக இருக்கும் என்பது குறித்து வல்லுநர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
இந்தியாவில் வருகிறது ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி.. ஒரு டோஸ் போட்டாலே போதும்!
ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையிஸ், "கடந்த ஒரு வாரத்தில் உலகளவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ளது. டெல்டா கொரோனா பாதிப்பு காரணமாகவே இப்போது பிரிட்டன் நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா வேக்சின்கள் உயிரிழப்பையும் தீவிர கொரோனா பாதிப்பையும் குறைத்தாலும் வைரஸ் பாதிப்பை தடுப்பூசி தடுப்பதில்லை. இதை உணராமல் பொதுமக்கள் இருப்பதால் தான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது" என்று தெரிவித்தார்.
அதிகரிக்கும் கொரோனா
இங்கிலாந்தில் 43,000 பேருக்கு, போலந்தில் 28,000 பேருக்கு, செக் குடியரசில் 25,000 பேருக்கு நெதர்லாந்தில் 24,000 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளிலும் இதே நிலை தான். தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பால் ஸ்லோவாக்கியா நாட்டில் இரண்டு வாரக் காலத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே மிகக் குறைந்த வேக்சின் சதவீதத்தைக் கொண்ட நாடு ஸ்லோவாக்கியா என்பது குறிப்பிடத்தக்கது.
வேக்சின்
வேக்சின் போட்டுக்கொள்ளாதவர்கள் மத்தியில் தான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. உயிரிழப்புகளும் வேக்சின் போடாதவர்கள் மத்தியில் தான் அதிகமாக உள்ளது. இந்தச் சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல்வேறு நாடுகளும் பூஸ்டர் டோஸ் பணிகளையும் தொடங்கியுள்ளன. அடுத்து வரும் மாதங்களிலும் ஐரோப்பாவில் நிலைமை மோசமாகலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. பயணக் கட்டுப்பாடுகளை பல்வேறு நாடுகளும் தளர்த்தி வரும் நிலையில் ஐரோப்பா மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் இது ஒரு அச்சுறுத்தலாகவே கருதப்படுகிறது.
புதிய உருமாறிய கொரோனா
அதேபோல ஆப்ரிக்கா நாடான போட்ஸ்வானாவில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய உருமாறிய கொரோனா வைரசும் ஆராய்ச்சியாளர்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளது,. B.1.1529 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தனது ஸ்பைக் புரதத்தில் 32 மாற்றங்களைக் கொண்டுள்ளது. இது குறித்து சர்வதேச ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஏன் ஆபத்து
கொரோனா வைரசில் இந்தளவுக்கு புரோத ஸ்பைக்கில் மாற்றங்கள் ஏற்படுவது இதுவே முதல்முறை என்பதால் இது ஆய்வாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வைரசுக்கு வெளியே இருக்கும் புரோத ஸ்பைக் மூலமே அவை மனித செல்களை பற்றிக்கொள்கிறது. இதில் ஏற்படும் சில மாற்றங்கள் வைரஸ் பரவலை அதிகரிக்கலாம். கடந்த நவ. 11ஆம் தேதி இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், அதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா, ஹாங்காக் நாடுகளுக்கு இந்த உருமாறிய கொரோனா பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன ஆகும்
இது சர்வதேச நாடுகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா உலகளவில் எந்தளவு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என அனைவருக்கும் தெரியும். அது கட்டுக்குள் வரவே பல மாதங்கள் ஆனது. இந்தச் சூழலில் போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவாக வாய்ப்புள்ளது. இருப்பினும், இது அடுத்த அலையை ஏற்படுத்துமா என்பது குறித்து தற்போது உறுதியாகக் கூற முடியாது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியா முடிவு
அதேபோல இந்தாண்டு இறுதி முதல் சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்கவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதிய உருமாறிய கொரோனாவால் எங்கு மீண்டும் இந்தியாவில் மற்றொரு அலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆய்வாளர்களுடன் இணைந்து அடுத்த அலை ஏற்படுவதைத் தடுக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.