கொரோனா பாதிப்பு தீவிரம்- டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி திடீர் அனுமதி
டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியிலும் கொரோனா தாக்கம் அதிகரித்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து சோனியா காந்தி வீட்டிலேயே தம்மை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனை காங்கிரஸ் தலைவர்கள் உறுதி செய்தனர்.
பின்னர் சோனியாவின் மகளும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் தமக்கு லேசான கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறியிருந்தார். இதனால் பிரியங்கா காந்தியும் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் இன்று டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி, கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை மூத்த காங்கிரஸ் தலைவர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் சோனியா காந்தியின் உடல்நலம் சீராக இருப்பதாகவும் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்திருக்கிறார்.
சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. முதலில் ஜூன் 8-ந் தேதி சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ஆஜராக சம்மன் அனுப்பியது அமலாக்கப் பிரிவு. ஆனால் வேறு ஒரு தேதியில் ஆஜராக சோனியா காந்தி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனால் வரும் 23-ந் தேதி சோனியா காந்தி ஆஜராக அமலாக்கப் பிரிவு அவகாசம் கொடுத்தது. ராகுல் காந்தி நாளை அமலாக்கப் பிரிவு முன்பு ஆஜராக உள்ளார்.