பெட்ரோல் விலை தாறுமாறாக உயரும்! 120 வரை கூட அசால்டாக போகுமாம்! இஸ்ரேல் ஈரான் மோதலால் வந்த வினை
டெல்லி: ஈரான் அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்கா நேற்றைய தினம் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் மத்திய கிழக்கில் மிகப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகு இதுவரை இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மேலும், இந்த மோதலால் மத்திய கிழக்கில் இருந்து வரும் கச்சா எண்ணெய் சப்ளை தடைப்படலாம் என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு மோதல் இப்போது அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது. கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல் ஈரான் இடையே மட்டுமே மோதல் நிலவி வந்தது. இப்போது அமெரிக்கா இதில் உள்ளே வந்து, ஈரான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இது பதற்றத்தை அதிகரித்துள்ளது. அது மத்திய கிழக்கில் மட்டுமின்றி உலகெங்கும் பிரதிபலிக்கிறது.

உயரும் கச்சா எண்ணெய்
இந்த மோதல் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஜூலை 13ம் தேதி தான் ஈரான் மீது இஸ்ரேல் முதல்முறையாகத் தாக்குதலை நடத்தியது. அப்போது முதலே கச்சா எண்ணெய் விலை உயர்ந்தே வருகிறது. அமெரிக்கா இந்த மோதலில் உள்ளே வந்தது கச்சா எண்ணெய் விலையே மேலும் அதிகரித்து இருக்கிறது.
திங்களன்று ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் $78.93 ஆக இருந்தது. அதேபோல அமெரிக்கக் கச்சா எண்ணெய் குறியீடான WTI ஒரு பேரல் $75.73 ஆகவும் அதிகரித்தது. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்தே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை இந்தளவுக்கு உயர்வது இதுவே முதல்முறையாகும்.
அச்சம் ஏன்?
ஓபெக் அமைப்பில் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக ஈரான் உள்ளது. மேலும், உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடக்கிறது. இந்தச் சூழலில் தான் இதை மூடுவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இதற்கு முன்பும் கூட கடந்த காலங்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டாலும் ஈரான் அதுபோல செய்யவில்லை. ஆனால், இந்த முறை ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது.
120 வரை போகும்!
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியளவு மூடப்பட்டாலே கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு $110 வரை உயரக்கூடும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் எச்சரித்துள்ளது. அப்போது முழுமையாக மூடப்பட்டால் அது 120- 150 டாலர் வரை கூட போகலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த மோதல் காரணமாகக் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 13%, அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் 10% உயர்ந்துள்ளது.
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் என்றால் என்ன?
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் என்பது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்யப் பயன்படுத்தப்படும். இது வட கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. குறைந்த அடர்த்தி மற்றும் குறைந்த சல்பர் கொண்டது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள்களாகச் சுத்திகரிப்பது எளிது மற்றும் செலவு குறைவு.
சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் கச்சா எண்ணெய்யில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய்யின் விலை நிர்ணயிக்க இது பயன்படுகிறது. குறிப்பாக ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான எண்ணெய் விலை நிர்ணயிக்க இது பயன்படுகிறது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் WTI என்பது அமெரிக்காவில் வர்த்தகமாகும் கச்சா எண்ணெய் குறியீடு. ப்ரெண்ட் என்பது சர்வதேச அளவிலான குறியீடாகும்.












Click it and Unblock the Notifications