மீண்டும் 4 லட்சம்.. டிஸ்சார்ஜ் எண்ணிக்கையில் புது 'ரெக்கார்ட்' - கொரோனா ரிப்போர்ட்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,03,738 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை புது உயரம் தொட்டிருக்கிறது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கட்டுப்பாட்டை மீறி எகிறி வருகிறது. தினம் நான்கு லட்சம் என்ற அளவில் வைரஸ் அதிகரிக்கிறது. இது உலகில் வேறு எந்த நாட்டிலும் பதிவாகாத பாதிப்பாகும்.
நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் - ஈபிஎஸ், ஓபிஎஸ்.. சட்டசபை குழு தலைவர் பஞ்சாயத்தில் வெல்வது யார்?
இன்றைய சூழலில், உலகிலேயே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாடு இந்தியா மட்டுமே. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் மூலம், ஓரளவாவது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று அரசுகள் நம்புகின்றன.
டோட்டல் எண்ணிக்கை
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் நான்கு லட்சத்தை கடந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 03 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,22,96,414 ஆக அதிகரித்துள்ளது.
புதிய ரெக்கார்டு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 4,092 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,42,362 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,86,444 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இது புதிய ரெக்கார்டாகும். இதுவரை இந்தியாவில் ஒரேநாளில் இத்தனை பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதில்லை. இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,83,17,404 ஆக உயர்ந்துள்ளது.
பாதிப்பு சற்று குறைவு
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 37,36,648 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்தியாவில் இதுவரை 16,94,39,663 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 4 லட்சத்துக்கும் அதிகமானோரை கொரோனா தினமும் பாதித்து வந்தாலும், நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவாக உள்ளது.
வைரஸ் எழுச்சி
அதேசமயம், இந்தியாவில் மொத்தம் உள்ள 741 மாவட்டங்களில், மே முதல் வாரத்தில், 40% அல்லது 301க்கும் அதிகமான மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு சராசரி வீதம் 20% அல்லது அதற்கு அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் அனைத்தும் மொத்தமுள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 31 மாநிலங்களில் உள்ளன. இது பரவலான வைரஸ் எழுச்சியைக் குறிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.