அதே டெய்லர்.. அதே வாடகை.! நேற்று எருமைகள்.. இன்று பசு மாடுகள்.. விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயில்
டெல்லி: நவ்தே பாரத் ரயில் நேற்று எருமை மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கிய நிலையில், இன்று மீண்டும் அது விபத்தில் சிக்கி உள்ளது.
நமது நாட்டில் மிகவும் முக்கியமான போக்குவரத்து முறையாக ரயில்கள் உள்ளன. நமது நாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விரிவான நெட்வொர்க்கை ரயில்கள் கொண்டு உள்ளன.
ஏழை மட்டும் நடுத்தர மக்கள் பலரும் ரயில்களில் செல்ல ஆர்வம் காட்டக் குறைந்த கட்டணமே அதற்கு முக்கிய காரணம். விமான கட்டணத்துடன் ஒப்பிடுகையில் ரயிலுக்கு அதில் ஒரு பகுதி கட்டணம் கொடுத்தாலே போதும்.
குறுக்கே வந்த எருமைகள்.. பிரதமர் மோடி துவக்கிய வந்தே பாரத் ரயில் விபத்து.. உருக்குலைந்த என்ஜின்
ரயில்கள்
இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் ரயில் போக்குவரத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். இருப்பினும், இந்திய ரயில்வே கடந்த பல ஆண்டுகளாகவே பழமையாகவே இருக்கிறது. அதேநேரம் குறைந்த கட்டணத்தில் இயங்குவதால் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் இதன் காரணமாகவே அதிவேக ரயில்களில் இந்தியாவால் பெரிய முதலீடுகளைச் செய்ய முடியவில்லை என்ற சொல்லப்பட்டது.
வந்தே பாரத்
இருப்பினும், இந்த நிலையை மாற்ற ரயில்வே துறை சில ஆண்டுகளாக முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே வந்தே பாரத் உருவாக்கப்பட்டு உள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில், அதிகமாக 180 கிமீ வேகத்தில் செல்லக் கூடியதாகும்.. நாட்டில் இரு வந்தே பாரத் ரயில்கள் இங்கு வரும் நிலையில், மூன்றாவது ரயிலைக் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி, காந்தி நகர்- மும்பை இடையே பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
எருமை
நேற்றைய தினம் இந்த ரயில் , பட்வா- மணிநகர் இடையே சென்ற போது, எருமை மாடுகள் மோதி விபத்தில் சிக்கியது. இது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இன்ஜினின் முன்பகுதி மட்டுமே சற்று சேதமடைந்தது. அதன் முன்பகுதி உடனடியாக சரி செய்யப்பட்டது. இதில் நான்கு எருமை மாடுகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக எருமை மாடுகளின் உரிமையாளர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே இந்தச் சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் மீண்டும் அப்படியொரு விபத்து நடந்துள்ளது.
பசு மாடுகள்
நேற்று எருமை மாடுகள் மீது போதிய நிலையில், இன்று வந்தே பாரத் ரயில் பசுக்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. காந்திநகர்-மும்பை இடையே இயங்கும் அந்த ரயில், குஜராத்தில் உள்ள ஆனந்த் ஸ்டேஷன் அருகே பசு மீது மோதியது. இதனால் ரயிலின் முன்பக்க பம்பரில் மட்டும் சிறிய பாதிப்பு ஏற்பட்டது. அதுவும் 10 நிமிடங்களில் சரி செய்யப்பட்டு, மீண்டும் ரயில் வழக்கம் போல இயக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எங்கே விபத்து
சில நிமிடங்களிலேயே ரயில் மீண்டும் இயக்கப்பட்டதாகவும் இதனால் உள்ளே இருந்த பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் தெரிவித்தார். இந்த விபத்து காந்திநகரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் ஆனந்த் நகருக்கு அருகே ஏற்பட்டு உள்ளது. இது பிற்பகல் 3.44 மணிக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம்
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதால் வந்தே பாரத் ரயிலுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று பலரும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "இந்தியா போன்ற நாடுகளில் கால்நடைகள் விபத்து தவிர்க்க முடியாதவை. எனவே ரயிலை வடிவமைக்கும் போதே இதையும் மனதில் வைத்துத் தான் உருவாக்கி உள்ளோம். முன்பக்கத்தில் உள்ள அதன் பகுதி எளிதாக மாற்றக்கூடியது" என்று விளக்கம் அளித்து உள்ளார்.