டிசம்பர் 6.. பாபர் மசூதி இடிப்பு தினம்.. தமிழ்நாடு முழுக்க 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு
சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுக்க ஒரு லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992- ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை இந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம் ஏற்படுத்தியது.
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆண்டு தோறும் எடுக்கப்பட்டு வருகிறது.
பாபர் மசூதி இடிப்பு தினம்.. பழனி முருகன் கோவில் உள்பட முக்கிய வழிபாட்டு தலங்களில் பலத்த பாதுகாப்பு
தீவிர கண்காணிப்பு
குறிப்பாக தமிழகத்திலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பினை அதிகரிக்க தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ஆம் தேதி 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுபோக முக்கியமான இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் மட்டும்
தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். திருவல்லிக்கேணி, மயிலப்பூர், பெரிய மேடு, பாரிமுனை நகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய வர்த்தக பகுதியாக விளங்கும் தி.நகரில் கூடுதல் பாதுகாப்பு போடபப்ட்டுள்ளது. போலீசார் ரோந்து பணிகளை அதிகரிக்கவும் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் வாகன சோதனையை கூடுதல் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கார்த்திகை தீப திருவிழா
தங்கும் விடுதிகள், லாட்ஜ்களில் சந்தேகத்திற்கு உரிய வகையில் யாராவது தங்கியிருக்கிறார்களா? என்பதை கண்டறியும் சோதனை நடத்தப்பட இருக்கிறது. மத வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகை தீப திருவிழா நாள் என்பதால் இரவு நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் எனவே கோவில்களில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிசிடிவி கேமரா காட்சிகளையும்..
பேருந்து ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது. மோப்ப நாய்களும் ரயில் நிலையங்களை சுற்றி வரும்.போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். சிசிடிவி கேமரா காட்சிகளையும் உன்னிப்பாக கண்காணிக்க போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாளை நடைபெறூம் தீபத்திருவிழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.
முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்
மேலும் சில முக்கிய பிரமுகர்களும் பங்கேற்பதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக டிஜிபி சைலேந்திர பாபு திருவண்ணாமலையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார். அனுமதிச்சீட்டு இருக்கும் பக்தர்களை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும்
கோவை கார் வெடிப்பு சம்பவம், மங்களூரு குக்கர் வெடிகுண்டு வெடிப்பு ஆகியவற்றால் இந்த முறை கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் இரவு ரோந்து பணிகள், வாகன தணிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.