டெல்லி தேர்தல்: எப்படியாவது அதிகபட்சம் 6 சீட்டாவது ஜெயிக்கனுமே.. முதல்வர்களை களமிறக்கும் காங்கிரஸ்
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் அதிகபட்சம் 6 இடங்களையாவது கைப்பற்றி இருப்பைத் தக்க வைக்க வேண்டும் என போராடுகிறது காங்கிரஸ். இதற்காக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், இமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சுகு மற்றும் முன்னாள் முதல்வர்கள் பலரையும் டெல்லி தேர்தல் பிரசாரத்தில் களமிறக்குகிறது காங்கிரஸ்.
டெல்லியை காங்கிரஸ் கட்சி கோட்டையைப் போல வைத்திருந்த காலமும் இருந்தது. 1998 முதல் 2013-ம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியே நீடித்தது. டெல்லி அரசியலில் ஆம் ஆத்மி கால் பதித்த நிலையில் காங்கிரஸ் கட்சி இருந்த இடமே தெரியாமல் போனது.

2013-ம் ஆண்டு டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 8 இடங்களில்தான் வென்றது. அதன் வாக்கு சதவீதம் 24.6% ஆக இருந்தது. 2015 சட்டசபை தேர்தலில் டெல்லியில் ஒரு இடத்தைக் கூட காங்கிரஸ் கைப்பற்ற முடியவில்லை. அதன் வாக்கு சதவீதமும் 9.7% ஆக சரிந்தது. 2020 சட்டசபை தேர்தலில் 66 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் அப்போதும் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை.
இதனால் இந்த முறை எப்படியாவது வாக்கு சதவீதத்தை அதிகரித்து 5 முதல் 6 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என போராடுகிறது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில், ஆகக் குறைந்தது 15% வாக்குகளைப் பெற வேண்டும் என்பதுதான் இலக்கு என்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் டெல்லியில் 20 சட்டசபை தொகுதிகளில் கணிசமான வாக்கு வங்கி இருப்பதாக நம்புகிறது. இந்த 20 இடங்களில் அதிகபட்சம் 6 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுகிறது காங்கிரஸ்.
இதற்காக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சுகு, கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், முன்னாள் முதல்வர்கள்- துணை முதல்வர்களான பூபேஷ் பாகல், அசோக் கெலாட், சரண்ஜித் சன்னி, சச்சின் பைலட் என பெரிய பட்டாளத்தை டெல்லி தேர்தல் களத்தில் காங்கிரஸ் களமிறக்கி இருக்கிறது. டெல்லியில் தலித்துகள், சிறுபான்மையினர் ஆம் ஆத்மி அரசு மீது அதிருப்தியில் இருப்பதால் தங்களுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் எனவும் நம்புகின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.












Click it and Unblock the Notifications