பாஜக எம்எல்ஏ காலில் விழுந்த கெஞ்சிய ஆம் ஆத்மி அமைச்சர்! அதிர்ச்சியில் பொதுமக்கள்.. டெல்லியில் ஷாக்
டெல்லி: டெல்லியில் இப்போது அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. இதற்கிடையே நேற்றைய தினம் டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் சௌவரப் பரத்வாஜ் திடீரென பாஜக எம்எல்ஏ ஒருவரின் காலில் விழுந்து கெஞ்சினார். டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகை அருகே நடந்த இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் இப்போது ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அங்குக் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முதல்வராக இருந்த கெஜ்ரிவால் மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாகத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

இப்போது டெல்லி முதல்வராக அதிஷி இருக்கிறார். இதற்கிடையே அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பஸ் மார்ஷல் விவகாரத்தில் துணை நிலை ஆளுநரைச் சந்திக்கச் சென்றனர். அப்போது அமைச்சர் சௌரப் பரத்வாஜ் திடீரென அங்கிருந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பஸ் மார்ஷல்: டெல்லி அரசு கடந்த 2015ம் ஆண்டில் தான் முதலில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களை பஸ் மார்ஷல்களாக பணியமர்த்தியது. பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே அவர்களின் பணியாகும். இந்த போஸ்டில் பல ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். இதற்கிடையே கடந்தாண்டு இது குறித்து சிவில் பாதுகாப்புத் துறை எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
அதாவது சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் இயற்கை பேரிடர் சமயங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் போக்குவரத்து சேவைகளின் போது பயன்படுத்த முடியாது என்றும் குரல்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த நவம்பர் 2023இல் சுமார் 10,000 பஸ் மார்ஷல்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதுவே பிரச்சினைக்குத் தொடக்கப்புள்ளி. இதையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட பஸ் மார்ஷல்கள் போராட்டத்தில் குத்தினர். கடந்த சில நாட்களாக இந்த போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
பரபரப்பு: இதற்கிடையே பஸ் மார்ஷல்களுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் இணைந்து லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்திக்க இருந்தனர். இரு கட்சி பிரதிநிதிகளும் இணைந்து பஸ் மார்ஷல்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பதே திட்டமாகும். ஆனால், அங்குத் துணை நிலை ஆளுநர் இல்லத்தில் திடீரென நிலை மாறியது.
பிச்சை எடுத்து தான் மகனின் கல்வி கட்டணத்தை கட்டினேன்.. கலங்கிய மணிஷ் சிசோடியா! தொண்டர்கள் வேதனை
காலில் விழுந்த அமைச்சர்: துணை நிலை ஆளுநரைச் சந்திக்க பாஜக எம்எல்ஏக்கள் வர மறுப்பதாக ஆம் தரப்பில் புகார் கூறினர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் சௌரப் பரத்வாஜ், பாஜக எம்எல்ஏ விஜேந்தர் குப்தாவின் காலில் விழுந்தார். பஸ் மார்ஷல்களை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து துணை நிலை ஆளுநரைச் சந்திக்க ஆம் ஆத்மி தலைவர்களுடன் வருமாறு கேட்டுக் கெஞ்சினார். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரு கட்சிகளின் எம்எல்ஏக்களும் துணை நிலை ஆளுநர் வீட்டை அடைந்தனர். டெல்லி முதல்வர் அதிஷி துணை நிலை ஆளுநரைச் சந்திக்க உள்ளே சென்றுவிட்டார். இருப்பினும், பாஜக எம்எல்ஏக்கள் அமைச்சரவை குறிப்பில் கையெழுத்திடவில்லை என்று குற்றம் சாட்டி, அங்குத் துணை நிலை ஆளுநர் வீட்டிற்கு வெளியே போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவங்கள் அங்குப் பதற்றத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications