ஓமிக்ரான் வைரஸ்.. இப்போதே இதை செய்யுங்க.. இல்லாவிடில்.. பிரதமர் மோடியை அலர்ட் செய்யும் கெஜ்ரிவால்!
டெல்லி: உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உலக நாடுகள் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த புதிய வகை உருமாறிய கொரோனா B.1.1529 என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் வைரஸ் 30 முறை உருமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓமிக்ரான் வைரஸ்
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் காற்றில் பரவ வாய்ப்புள்ளது என்றும் டெல்டாவை வைரஸை விட வீரியம்மிக்கது என்றும் அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன.
விமான சேவைக்கு தடை
இதனால் உலக நாடுகள் தென்னாப்பிரிக்கா உள்பட ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து தங்கள் நாடுகளுக்கு விமான சேவைக்கு தடை வித்துள்ளன. இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன. ஓமிக்ரான் வைரசால் இந்தியாவும் உஷராகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிடம் இருந்து வருபவர்களை பரிசோதிக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கெஜ்ரிவால் கடிதம்
ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட நாடுகளிடம் இருந்து விமானங்கள் வருவதற்கு முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கெஜ்ரிவால் கூறுகையில், ' கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனாவுக்கு எதிராக நமது நாடு கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறது. மிகவும் சிரமப்பட்டு, கோடிக்கணக்கான நமது சுகாதார, முன்கள பணியாளராகள் தன்னலமற்ற சேவையின் காரணமாக, நம் நாடு கொரோனாவிலிருந்து மீண்டுள்ளது.
Recommended Video
விமானங்களை நிறுத்த வேண்டும்
ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் புதிய வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான விமான பயணத்தை நிறுத்தி வைத்துள்ளன. எனவே ஓமிக்ரான் பாதிப்புள்ள பிராந்தியங்களில் இருந்து இந்தியாவுக்கு விமானங்களை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். எந்த ஒரு பாதிக்கப்பட்ட நபரும் இந்தியாவிற்குள் நுழைந்தால் கடுமையாக தீங்கு விளைவிக்கும்' என்று கடிதத்தில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.