ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு:ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவுக்கு கோர்ட் அனுமதி
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ப.சிதம்பரம் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது ஜாமீன் மனு மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க அனுமதி கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்தது.
இம்மனுக்கள் மீதான விசாரணை நேற்று நிறைவடைந்தது. இன்று இவ்வழக்கில், ப.சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளிப்பதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குகர் உத்தரவிட்டார்.
நாளை கைது செய்து விசாரணை
நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து டெல்லி திஹார் சிறையில் ப. சிதம்பரத்தை நாளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்கின்றனர். அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.