அதானி நிறுவனத்திற்கு எதிரான அவதூறு.. டெல்லி நீதிமன்றம் தடை.. சோசியல் மீடியா பதிவை நீக்கவும் உத்தரவு!
டெல்லி: அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு எதிராக அவதூறுப் பதிவுகளை வெளியிடுவதற்கு பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பத்திரிகையாளர்களும் வெளிநாட்டுடன் தொடர்புடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்கள் கட்டுரைகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளில் உள்ள அவதூறு கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் இடைக்கால உத்தரவில் கூறி இருக்கிறது.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக டெல்லி நீதிமன்றத்தில் paranjoy.in, adaniwatch.org, adanifiles.com.au போன்ற இணையதளங்களில் வெளியான பதிவுகள், அதனுடன் தொடர்புடைய வீடியோக்கள் ஆகியவை தங்கள் நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கில் இருப்பதாகவும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி அனுஜ் குமார் சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்தரப்பாக பரஞ்சாய் குஹா தாகுர்தா, ரவி நாயர், அமிர் தாஸ்குப்தா, அயஸ்கண்ட தாஸ், ஆயுஷ் ஜோஷி, பாப் பிரவுன் அறக்கட்டளை, ட்ரீம்ஸ்கேப் நெட்வொர்க் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், கெட்டப் லிமிடெட், டொமைன் டைரக்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சேர்க்கப்பட்டனர்.
அப்போது, இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை நிறுவனத்திற்குச் சாதகமாக உள்ளது. தொடர்ந்து அவதூறு பரப்பப்படுவது நிறுவனத்தின் நற்பெயருக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தும். இது ஊடக விசாரணையாக மாறலாம் என்பதால், தற்போதைய சூழல் நிறுவனத்திற்கே சாதகமாக உள்ளது என்று நீதிபதி அனுஜ் குமார் சிங் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணை வரை, நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில், ஆதாரமற்ற மற்றும் அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதற்கோ, விநியோகிப்பதற்கோ அல்லது பரப்புவதற்கோ நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல், கட்டுரைகள் மற்றும் பதிவுகள் தவறானதாகவும், சரிபார்க்கப்படாததாகவும், அவதூறானதாகவும் உள்ளதால், கட்டுரைகள், சோசியல் மீடியா பதிவுகள், ட்வீட்களில் இருந்து அத்தகைய அவதூறு கருத்துக்களை நீக்க வேண்டும்.
ஒருவேளை அது சாத்தியமில்லை என்றால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குள் அவற்றை அகற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. அதேபோல் அவதூறுப் பதிவுகளை நீக்க முடியவில்லை என்றால், கூகுள், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலமாக 36 மணி நேரத்திற்குள் அத்தகைய உள்ளடக்கங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications