ஏழைங்கதான் டார்கெட்.. டெல்லியில் பணக்காரர்களின் வீட்டை இடிப்பீர்களா? உச்ச நீதிமன்றத்தில் பரபர வாதம்!
டெல்லி: ஏழை மக்களை மட்டும் டார்கெட் செய்து கட்டிடங்களை இடித்துள்ளனர், டெல்லியில் ஆக்கிரமிப்பு நிலத்தில் வீடு கட்டிய பணக்காரர்களின் வீடுகளை இடிப்பீர்களா என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பரபரப்பு வாதம் வைத்துள்ளார்.
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் நேற்று ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டிடங்களை கட்டியதாக கூறி பல்வேறு கட்டிடங்கள் வீடுகள் இடிக்கப்பட்டன. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில் இன்று அந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், பிஆர் காவாய் ஆகியோர் அமர்வு இன்று வழக்கை விசாரணை செய்து வருகிறது.

டெல்லி வழக்கு
இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று கட்டிடங்களை இடிக்க இடைக்கால தடை உத்தரவு வாங்க காரணமாக இருந்த வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் இன்று உச்ச நீதிமன்றத்தில் வாதம் செய்தார். அதில், டெல்லி ஜஹாங்கிர்புரியில் கட்டிடத்தை இடிப்பது ஒரு நகரத்தின் பிரச்சனையல்ல, நாட்டின் பிரச்சனை. டெல்லியில் கட்டிடம் இடிக்கப்பட்டது இந்த சமுதாயத்தின் பிரச்சனை. இதை நாம் அனுமதித்தால், பின்னர் நாட்டில் சட்டம் இருக்காது.

பாஜக டெல்லி
பாஜக டெல்லி தலைவர் சொன்னதும் கட்டிடத்தை இடிக்க தொடங்கிவிட்டனர். என்ன நியாயம் இது. டெல்லியில் மொத்தம் 731 காலனிகள் விதிமீறி கட்டப்பட்டுள்ளது. இதில் பல லட்சம் பேர் இருக்கிறார்கள், அவர்களை எல்லாம் நீக்கவில்லை. சரியாக இங்கே ஒரு பிரிவினர் மட்டும் இருக்கும் காலனியை குறி வைத்தது ஏன்? ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காமல் வீடுகளை உடனே இடித்தது எப்படி சரியாகும்?

பல வருடம்
அவர்கள் இங்கே 30 வருடங்களாக வசித்து வருகிறார்கள், அவர்களை வெளியேற சொல்வது அப்பட்டமான விதிமீறல். மக்களுக்கு வாழ உரிமை உள்ளது, அவர்களை திடீரென வெளியேற்ற முடியாது. அவர்கள் ஏழைகள், அவர்களின் வீடுகளை இடித்ததற்கு யார் பொறுப்பேற்பார்? .தெற்கு டெல்லியில் கோல்ப் லிங்க் உள்ள பகுதிக்கு போங்கள், அங்கு பல கட்டிடங்கள் இப்படி விதியை மீறி கட்டப்பட்டுள்ளது.

இடிக்க முடியுமா?
அதை எல்லாம் உங்களால் இடிக்க முடியாது. நீங்கள் அவர்களை தொட கூட மாட்டீர்கள். ஆனால் ஏழை மக்களை மட்டும் டார்கெட் செய்வீர்கள். பாஜக டெல்லி தலைவர் கடிதம் எழுதியதும் இப்படி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு உள்ளன. நீதிமன்றத்தில் நாம் முறையிடுவோம் என்று தெரிந்தே 9 மணிக்கே இடிக்க தொடங்கிவிட்டனர். கோர்ட் உத்தரவிட்டும், உத்தரவு வரவில்லை என்று கூறி தொடர்ந்து இடித்தனர்.
Recommended Video

அனுமன் ஜெயந்தி
அங்கு அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடத்தவே அனுமதிக்கவில்லை. போலீஸ் தடையை மீறி அங்கு ஊர்வலம் நடத்தி உள்ளனர் என்று வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் வாதம் வைத்தார். தற்போது இந்த வழக்கில் ஜாமியா உலமா ஐ ஹிந்த் அமைப்பு மூலம் இன்னொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மனுதாரர் சார்பாக கபில் சிபல் ஆஜராகி வாதம் செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications