ஊரடங்கின்போது தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பிய விவசாயி.. டெல்லியில் தூக்கிட்டு தற்கொலை!
டெல்லி: கொரோனா வைரஸ் ஊடரங்கின் போது, தனது தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த விவசாயி பப்பன் சிங் கெலாட், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் வேலை பார்த்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், போக்குவரத்து வசதியின்றி நடந்தே சொந்த ஊர் திரும்பும் நிலை ஏற்பட்டது. அப்படி நடந்தே சென்ற பலரும், உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டது.
அப்போது டெல்லியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது ஊழியர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்புவதற்காக விமான டிக்கெட் கொடுத்து வழியனுப்பி வைத்த சம்பவம் நாடு முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அந்த விவசாயி பற்றிய தகவல்களை தேடியபோது, அவர் டெல்லியில் காளான் பண்ணை வைத்து விவசாயம் செய்து வரும் பப்பன் சிங் கெலாட் என்பது தெரிய வந்தது.
55 வயதாகும் பப்பன் சிங் கெலாட், தொழிலாளர்களை பண்புடனும், மரியாதையுடனும் நடத்தக் கூடியவர். அவரது நற்பண்பு, கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பின், தனது தொழிலாளர்கள் டெல்லியில் பணிக்கு திரும்புவதற்காக மீண்டும் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கினார். இதன் மூலம் பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் முதல் ஏராளமான பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் டெல்லி அலிப்பூரில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி நேற்று மாலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார் பப்பன் சிங் கெலாட். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் தற்கொலை செய்துகொள்வதாக கூறப்பட்டுள்ளது. இருந்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலாளர்கள் மீது அந்த அளவுக்குப் பரிவு காட்டிய பப்பன் சிங் கெலாட் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பப்பன் சிங் கெலாட்டிற்கு, மனைவி மற்றும் மகள் ஆகியோர் இருக்கும் நிலையில், அவர்களுக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர்.