ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான அப்பீலை அவசர வழக்காக விசாரிக்க முடியாது: டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: திமுக எம்.பி.க்கள் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோர் 2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்க்கும் சிபிஐ-ன் மேல்முறையீட்டு மனு மீது உடனடியாக விசாரணை நடத்த முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டையே உலுக்கியது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு. உரிய ஆதாரங்கள் இல்லாமல் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ1,70,000 கோடி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை கூறியது.

இது பெரும் அரசியல் புயலை கிளப்பியது. திமுகவின் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா ராஜினாமா செய்தார். அதேபோல் தற்போதைய திமுக எம்.பி. கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்தார். இவ்வழக்கில் சிபிஐ, அமலாக்கப் பிரிவு தரப்பில் எந்த ஒரு ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட அனைவரையுமே விடுதலை செய்வதாக நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்தார். இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.
இம்மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து சிபிஐ வலியுறுத்தி வருகிறது. இன்றும் தாங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சிபிஐ தரப்பு வலியுறுத்தியது.
ஆனால் இதனை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஏற்கனவே பட்டியலிட்டபடி அக்டோபர் 24-ந் தேதிதான் விசாரணை தொடங்கும். மேல்முறையீட்டு மனுவை உடனே விசாரிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.












Click it and Unblock the Notifications