லஞ்சம் வாங்கும் போது வசமாக சிக்கிய சிபிஐ அதிகாரி! காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ஹைகோர்ட் உத்தரவு
டெல்லி: லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட சிபிஐ அதிகாரி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 2 அதிகாரிகள் என மூன்று பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது சிபிஐ, அமலாக்கத்துறையில் ஊழல் அதிகரித்துள்ளது என காட்டமாக தெரிவித்தது.
முறைகேடு புகார்கள், சட்ட விரோத பணப் பரிமாற்றங்கள் தொடர்பான வழக்குகளை சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்துகின்றன. சிபிஐ தன்னிச்சையான அமைப்பு என்றாலும் கூட மத்திய அரசின் கைப்பாவை போல செயல்படுவதாகவும் தனது அரசியல் எதிரிகளை வேட்டையாட இந்த விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

லஞ்சம் வாங்கிய சிபிஐ அதிகாரிகள்
இத்தகைய சூழலில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும் சில இடங்களில் புகார்கள் எழுப்பப்படுகிறது. அதாவது, விசாரணையை இழுத்தடிக்க, வழக்கில் இருந்து விடுவிக்க போன்ற நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட நபர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் தான், ஹரியானாவில் ஊழல் தொடர்பான சிபிஐ விசாரணையின் போது, சிபிஐ அதிகாரிகளே ரூ.35 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், அதில், முன்பணமாக ரூ.3.50 லட்சம் பெற்றது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்யபட்டு உள்ளனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
டெல்லி ஹைகோர்ட் உத்தரவு
இந்த வழக்கு நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையின்போது காட்டமான கருத்துக்களை டெல்லி உயர் நீதிமன்றம் முன்வைத்தது. நீதிபதி கூறியதாவது:- சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் பிற துறைகளில் ஊழல் அதிகரித்துள்ளது என்பதை காட்டும் ஒரு தனித்துவமான வழக்கு இதுவாகும்.
குற்றங்களை விசாரித்து, குற்றவாளிகளை ஊழல்களுக்கான தண்டனையை எதிர்கொள்ள வைப்பது ஆகியவற்றை முதன்மை கடமையாக கொண்ட புலனாய்வு அமைப்பின் மொத்த நடைமுறையையும் இது உலுக்குவதாக அமைந்துள்ளது. அரசு அதிகாரிகளின் தனியான ஒரு ஊழல் இது இல்லை என்பதையும் பெரிய அளவிலான சதி என்பதையும் இந்த புகார் காட்டுகிறது.
சிபிஐ காவலில் விசாரிக்கணும்
எனவே, இந்த வழக்கில் பெரிய சதியை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. எனவே, காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. இந்த சதி செயலின் தன்மையை கருத்தில் கொண்டு காவலில் விசாரிப்பது அவசியம். எனவே சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது." என்று உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை விசாரனை நீதிமன்றம் நிராகரித்து நீதிமன்றக் காவலில் கைது செய்யபட்ட அதிகாரிகளை அனுப்பியது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் இந்த முக்கியமான கருத்துக்களை முன்வைத்துள்ளது.
ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டனர்
இந்த வழக்கில் புகாரளித்த ஹரியானாவை சேர்ந்த ஹிமாச்சூன் என்பவர் மீதான வழக்குகளை முடிக்க சிபிஐ அதிகாரி ரூ. 50 லட்சம் லஞ்சம் கேட்டதாவும், 35 லட்ச ரூபாய் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் முதல் தவணையாக ரூ. 3.5 லட்சம் வாங்கும் போது சிபிஐ அதிகாரி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு உதவியதாக மத்திய அரசு அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்படனர். இவர்கள் மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications