நாட்டை கடவுள் காப்பாற்றட்டும்.. மத்திய அரசு அதிகாரிகள் தனி உலகத்தில் வாழ்கிறார்கள்- டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: மத்திய அரசின் அதிகாரிகள் தனி உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.. நாட்டின் கொரோனா நிலவரம் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
டெல்லியை சேர்ந்த பனாசியா பயோடெக் என்ற நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்தபோது, உயர் நீதிமன்றம் இவ்வாறு கடுமையான வார்த்தைகளை பதிவு செய்துள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசுடன் போட்ட ஒப்பந்தத்தின்படி தாங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டிருந்தது.

கடவுள் காப்பாற்றட்டும்
நேற்று இந்த வழக்கு மன்மோகன் மற்றும் நவீன் சாவ்லா ஆகிய இரு நீதிபதிகள் அம்ரவு முன்பு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கூறியதாவது: எந்த அதிகாரி இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்கிறார்? நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அவர் உணர்ந்து இருக்கிறாரா? இந்த நாட்டை கடவுள் காப்பாற்றட்டும். இதுபோன்ற அதிகாரிகளால்தான் நாம் இது போன்ற நிலைமையை சந்தித்துள்ளோம். இது போன்ற முக்கிய விஷயங்களில் உயரதிகாரிகள் முடிவுகளை எடுக்க வேண்டும், அதுவும் 30 நிமிடங்களுக்குள் எடுக்க வேண்டும்.

ஐவரி டவர்
உங்கள் அதிகாரிகளிடம் சொல்லுங்கள்.. இது தான் நல்ல வாய்ப்பு, இதை தவற விட்டுவிட வேண்டாம் என்பதை. வைரஸ் தொற்று ஒரு குடும்பத்தில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஒட்டுமொத்த நாட்டையும் சீரழித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், உங்கள் அதிகாரிகள் "ஐவரி டவரில்" வசித்து வருகிறார்கள் என்று நீதிபதிகள் மன்மோகன் மற்றும் நவீன் சாவ்லா தெரிவித்தனர்.

தனி உலகம்
எதார்த்த நிலையை விட்டுவிட்டு தனி உலகத்தில் அல்லது கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டு பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு ஓடுபவர்களை ஐவரி டவர் என்ற சொற்றொடர் கொண்டு குறிப்பிடுவது வழக்கம். மத்திய அரசு அதிகாரிகளுக்கு இந்த வார்த்தையை பயன்படுத்தி குட்டு வைத்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

திட்டு வாங்கியும் மாறவில்லை
மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை அரசு பெறுவதற்கு வாய்ப்பு இருக்கும் இந்த சூழ்நிலையில் அதை பயன்படுத்துங்கள், அல்லது இறப்புகள் தினசரி தொடர்கதையாகி விடும். ஒவ்வொரு நீதிமன்றத்திலும் நீங்கள் திட்டு வாங்குகிறீர்கள். ஆனால், இன்னமும் நீங்கள் விழித்துக் கொள்ளவில்லை. மனுதாரரின் வழக்கில் தங்களுக்கு தருவதாக ஒப்புக்கொண்ட பணம் இன்னும் தரப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிதி ஒதுக்காமல் இருந்தால் தடுப்பூசி தயாரிப்பு பணிகள் எப்படி வேகமாக நடைபெறும். இது மனித குலத்தின் நன்மைக்காக செய்யப்படுகிற பணி என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அரசு அனுமதியோடு ஏற்றுமதி
ஆனால், மத்திய அரசு இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிகள் உலகளாவிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்தியாவுக்கு பலன் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. ஆனால், மருந்து நிறுவனம் தரப்பில் வாதிடும்போது, அரசின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு தடுப்பூசியும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட முடியாது, இந்த தடுப்பூசிகள் இந்தியர்களின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டது.












Click it and Unblock the Notifications