டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை- ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்
டெல்லி: 50 டிகிரி செல்சியல் வெப்பநிலையால் தகித்து கொண்டிருந்த டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும் டெல்லியில் கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
டெல்லியில் கடந்த ஒரு வாரமாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. டெல்லி வீதிகளில் வீசிய அனல்காற்று பொதுமக்களை வறுத்தெடுத்து மிகவும் கடுமையாக பாதிப்படைய செய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக இந்த நிலைமை அடியோடு மாற தொடங்கிவிட்டது. டெல்லியில் வானம் மேக மூட்டமாக தொடர்ந்து இருந்ததால் வெப்ப நிலை சற்றே தணிந்தும் இருந்தது. மேலும் டெல்லியில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. இதனால் டெல்லியில் வெப்ப நிலை தலைகீழாக மாறி உள்ளது.
மேலும் கனமழையால் டெல்லியில் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சாலை போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. அத்துடன் சில இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும் டெல்லியில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருக்கிறது.