என்னையே யார் என்று கேட்பதா? இவ்வளவு கீழ்த்தரமா பார்த்ததில்லை.. கேஜ்ரிவாலிடம் டெல்லி ஆளுநர் ஆவேசம்
டெல்லி: ஒரு யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநரை "யார்" என்றும், "அவர் எங்கிருந்து வந்திருக்கிறார்" என்றும் கேட்பது மிகவும் கீழ்த்தரமான பேச்சு என்று டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா கூறியுள்ளார்.
சட்டசபையில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவருக்கு தாம் எழுதியுள்ள கடிதத்தில் ஆளுநர் வி.கே. சக்சேனா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்தக் கடிதம் அந்த மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சட்டசபையில் விளாசிய கேஜ்ரிவால்
டெல்லியை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பின்லாந்து நாட்டில் பயிற்சி கொடுப்பதற்காக அம்மாநில அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த திட்டத்திற்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அனுமதி அளிக்கவில்லை. ஏற்கனவே இதுபோன்ற பல திட்டங்களுக்கு ஆளுநர் அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வருவதால் டெல்லி முதல்வருக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையேயான மோதல் அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில், டெல்லி நேற்று முன்தினம் சட்டசபையில் இந்த விவகாரத்தை எழுப்பி ஆளுநரை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார் கேஜ்ரிவால்.

"யார் இந்த துணைநிலை ஆளுநர்?"
சட்டசபைில் அவர் பேசுகையில், "யார் இந்த துணைநிலை ஆளுநர். ஆளுநர் என்றால் தலை மீது அமர்வீர்களா? நமது குழந்தைகள் எப்படி படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க அவர் யார்? இவர்கள்தான் நமது குழந்தைகளை படிக்கவிடாமல் செய்கிறார்கள். துணைநிலை ஆளுநருக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. துணைநிலை ஆளுநருக்கு அரசின் திட்டங்களை தடுக்க எந்த அதிகாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் பல முறை தெளிவுப்படுத்திவிட்டது. ஆனாலும், தனது வரம்பை மீறி ஆளுநர் செயல்பட்டு வருகிறார்" என்றார்.

"என்னையே யார் என்று கேட்பதா?"
இந்நிலையில், முதல்வரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவருக்கு ஆளுநர் சக்சேனா இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், "கடந்த சில நாட்களாகவே என்னை பற்றி உண்மைக்கு புறம்பாகவும், எனக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் நீங்கள் பேசி வருகிறீர்கள். அந்த வகையில், அண்மையில் சட்டசபையில் பேசும் போது, "துணைநிலை யார்?"; "அவர் எங்கிருந்து வந்திருக்கிறார்?" என நீங்கள் பேசியிருக்கிறீர்கள். இது மிகவும் கீழ்த்தரமான பேச்சு. துணைநிலை ஆளுநரை பார்த்து யார் என முதல்வர் கேட்பது சரியல்ல.

"சந்திக்க மறுத்தது ஏன்?"
துணைநிலை ஆளுநர் யார் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மேலோட்டமாக புரட்டிப் பார்த்திருந்தால் கூட உங்களுக்கு தெரிந்திருக்கும். இதுபோன்ற கீழ்த்தரமான பேச்சுகளுக்கு நேரடியான பதில் என்றும் கிடைக்காது. டெல்லி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் பயிறசி வழங்குவது குறித்து ஆலோசிப்பதற்காக முதல்வர் என்னிடம் நேரம் கேட்டிருந்தார். நானும் கொடுத்திருந்தேன். முதல்வரும், துணை முதல்வரும் மட்டுமே வருவார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால், திடீரென முதல்வருடன் 80 பேர் வந்திருந்தார்கள். திடீரென 80 பேருடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமல்ல. அதனால்தான் அந்த சந்திப்புக்கு நான் அனுமதி கொடுக்கவில்லை. உடனே முதல்வர் வெளியே சென்று, "என்னை பார்க்க ஆளுநர் மறுத்துவிட்டார்" என பேசியுள்ளார். இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications