டெல்லியில் உச்சம் தொடும் கொரோனா... புதிதாக 7437 பேருக்கு தொற்று உறுதி
டெல்லி : டெல்லியில் இன்று ஒரே நாளில் 7437 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிகமானவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது இன்று தான்.
டெல்லியில் இதுவரை 23,181 பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நான்கரை மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் மிக அதிகபட்சமாக உயர்ந்துள்ளது இதுவே முதல் முறை. இதற்கு முன் கடந்த ஆண்டு நவம்பர் 19 ம் தேதி ஒரே நாளில் 7546 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதே ஒரே நாளில் ஏற்பட்ட உச்சபட்ச தொற்றாக கருதப்பட்டது.
ஒரே நாளில் 24 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் கொரோனாவால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,157 ஆக அதிகரித்துள்ளது.
8.10 சதவீதம் பேர் பாதிப்பு
கோவிட் 19 தொடர்பாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புள்ளி விபரத்தில், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 91,170 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 7437 பேருக்கு பாசிடிவ் என கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 8.10 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்பே கணித்த சத்யேந்திர ஜெயின்
நேற்று முன்தினம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5500 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், இதே நிலை தொடர்ந்தால் விரைவில் டெல்லியில் ஒரே நாளில் உச்சபட்ச அளவாக அதிகரிக்கும் என்றார்.
கடந்த ஆண்டு உச்சத்தை நெருங்கும் கொரோனா
இதற்கு முன் மிகஅதிகபட்சமாக கடந்த ஆண்டு நவம்பர் 11 அன்று 8593 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நவம்பர் 19 அன்று ஒரே நாளில் 131 பேர் உயிரிழந்தனர்.