டெல்லி சட்ட கல்லூரியில் சடலமாக கிடந்த தமிழக மாணவி.. உடன் சிக்கிய "அந்த" லெட்டர்.. பகீர் சம்பவம்
டெல்லி: டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதி அறையில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இதற்கிடையே அங்குத் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

மரணம்: அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே அவரது அறையில் இருந்து தற்கொலை கடிதத்தையும் போலீசார் மீட்டுள்ளனர். இளம்பெண் உயிரிழந்துள்ளதைப் பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
உயிரிழந்த அந்த மாணவி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் அம்ருதவர்ஷினி என்பதும் தெரிய வந்துள்ளது. டெல்லி தேசிய சட்ட கல்லூரியில் படித்து வந்த அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
பல்கலைக்கழகம் விளக்கம்: இது குறித்து பல்கலைக்கழக தரப்பு கூறுகையில், "எங்கள் மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கடினமான நேரத்தில் அந்த மாணவியின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
லெட்டர்: அந்த மாணவி எதற்காக உயிரிழந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட அறையில் அவர் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் கண்டறியப்பட்ட நிலையில், இது குறித்தும் அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இது தொடர்பாகக் கூடுதல் டிசிபி நிஷாந்த் குப்தா கூறுகையில், "அந்தப் பெண் சென்னையைச் சேர்ந்தவர்.. அவர் தனது கடிதத்தில் இந்த முடிவுக்கு யாரையும் குறை கூற விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த மாணவிக்கு ஏற்கனவே தற்கொலை எண்ணங்கள் வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே தனக்குத் தற்கொலை எண்ணங்கள் வந்துள்ளதாக அந்த பெண் தனது ரூம்மேட்களிடம் கூறியிருக்கிறார்" என்றார். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்குச் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் தற்கொலை சம்பவங்கள்: முன்னதாக, ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்லூரியிலும் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். கடந்த சனிக்கிழமை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் அந்த மாணவி கடைசியாக இரவு விருந்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக கல்லூரியின் செய்தி தொடர்பாளர் ஷஷாங்க் சேகர் கூறுகையில், "அந்த பெண் கடைசியாகப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் இரவு 9:30 மணி வரை நன்றாகத் தான் பேசிக் கொண்டு இருந்தார். பிறகு அவர் தனது ரூமிற்கு வந்துவிட்டார். இரவு 10 மணியளவில் அவரது ரூம்மேட் ரூமை வந்து தட்டி இருக்கிறார். நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்கவில்லை.
இதையடுத்து விடுதி வார்டன் அழைக்கப்பட்டு, கதவு உடைக்கப்பட்டது. அப்போது தான் அந்த மாணவி தரையில் சுயநினைவின்றி கிடந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். இருப்பினும், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். அவரது மரணத்திற்கான காரணத்தை இப்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்" என்றார். மாணவிகள் இதுபோ மர்மமாக உயிரிழப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், இது அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications