படைகள் குவிப்பு,ஓடுதளங்கள் அமைப்பு.. எல்லையில் சீனா நடத்தும் உளவியல் போர்.. இந்தியாவின் திட்டம் என்ன
டெல்லி: எந்தவொரு ஒப்பந்தங்களையும் மதிக்காமல், எல்லையில் ராணுவத்தைக் குவித்து வரும் சீனா, இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையில் மீண்டும் மாற்றியமைக்க பெரும் முயற்சி எடுக்கிறது. அதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும்.
Recommended Video
சரியாகக் கடந்த ஆண்டு இதே நாளில் தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கல்வான் எல்லையில் மோதல் ஏற்பட்டது. 2020 ஜூன் 15ஆம் தேதி ஏற்பட்ட இந்த மோதலில் சீனா படைகளுடன் மோதி 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்த மோதலில் சீனா வீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சுமார் 8 மாதங்களுக்குப் பின்னரே நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதாகச் சீனா அறிவித்திருந்தது.
தொடரும் பதற்றம்
இந்த மோதலைத் தொடர்ந்து, LAC என்று அழைக்கப்படும் இந்திய சீனா எல்லையில், குறிப்பாக LACஇன் மேற்கு செக்டாரில், இரண்டு நாடுகளும் அதிகப்படியான ராணுவத்தைக் குவிக்கத் தொடங்கின. அதேநேரம் மற்ற செக்டார்களில் 3,488 கி.மீ நீளமுள்ள தீர்க்கப்படாத எல்லையில் சுமார் 20 இடங்களிலும் தீவிர கண்காணிப்பில் இரண்டு தரப்பும் ஈடுபட்டுள்ளன. எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இதுவரை ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இயல்பு நிலை இல்லை
குறிப்பாகக் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிரச்சினை இருக்கும் அனைத்து பகுதிகளிலிருந்து இரு தரப்பும் படைகளைத் திரும்பப் பெற 'எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம்' கையெழுத்தானது. இது கையெழுத்தாகி நான்கு மாதங்கள் முடிந்துள்ள நிலையிலும்கூட இன்னும் எல்லையில் இயல்பு நிலை திரும்பவில்லை. பாங்கோங் த்சோ செக்டார் பகுதி, தவிர மற்ற பல பகுதிகளில் படைகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை.
சீன ராணுவம்
கரகோரம் முதல் லடாக் செக்டார் வரை இந்தியப் படைகள் வழக்கமாக ரோந்து பணிகளில் ஈடுபடும். ஆனால், இதைத் தடுக்கும் வகையில் டெப்சாங் சமவெளி, கோக்ரா ஹைட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சீனா ஆயரிகக்கணக்கான வீரர்களைக் குவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. பேச்சுவார்த்தைகள் எதுவும் களத்தில் எதிரொலிப்பதாகத் தெரியவில்லை. நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் சீனா கூடுதலாகவும் வீரர்களை எல்லைக்கு அனுப்பி வருகிறது.
விமான படை
ராணுவம் மட்டுமின்றி, விமானப்படையையும் எல்லையில் சீனா குவித்து வருகிறது. ராக்கெட்கள், ராணுவ ஹெலிகாப்டர்களை எல்லையில் நிறுத்தி வருகிறது. மேலும், அப்பகுதியில் அமைந்துள்ள ஓடுதளங்களை மேம்படுத்தும் பணிகளிலும் சீனா ஈடுபட்டுள்ளது. மேலும், ராணுவ ஹெலிகாப்டர்கள் இறங்க ஏதுவாக புதிய ஹெலிபேட்களையும் அந்நாடு ஏற்படுத்தி வருகிறது. இத்துடன் நிற்காமல் எல்லைப்பகுதிகளில் ராணுவ பயிற்சிகளையும் சீனா தொடங்கியுள்ளது.
உள்கட்டமைப்பு
அதேபோல எல்லைகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளிலும் சீனா ஈடுபட்டு வருகிறது. திபத் பகுதியில் ஏற்கனவே சுமார் 1.18 லட்சம் கிலோமீட்டருக்கு புதிய சாலைகளை அந்நாடு அமைத்துள்ளது. திபத் பகுதிகளில் இருக்கும் பழங்குடியினரை அப்புற்பபடுத்திவிட்டு, அங்கும் ராணுவத்தைச் சீனா குவித்து வருகிறது. அதேபோல அருணாசலப் பிரதேசத்திற்கு மிக அருகிலும் உள்கட்டமைப்பைச் சீனா மேம்படுத்தி வருகிறது.
உளவியல் போர்
இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தியாவுக்கு எதிராக உளவியல் போரைச் சீனா நடத்தி வருகிறது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. இந்தியாவை எச்சரிக்கும் வகையிலும், சீனாவின் ராணுவ பலத்தை விளக்கும் வகையிலும் அந்நாட்டின் நாளேடுகளில் தொடர்ந்து செய்திகளும் வெளியாகி வருகின்றன. இப்படிப் பல நடவடிக்கைகளை எடுத்தாலும்கூட மேற்கு செக்டாரில் இந்தியா பகுதிகளைச் சீனாவால் அடைய முடியவில்லை.
பாகிஸ்தானுடன் நெருக்கும்
இதனால் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளது சீனா. கடந்த டிசம்பர் மாதம் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக ஆலோசிக்கச் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்லாமாபாத் சென்றிருந்தார். இதன் மூலம் எல்லை முழுக்க பிரச்சினை உள்ளதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தச் சீனா முயல்வது தெளிவாகத் தெரிகிறது.
இந்தியா செய்ய வேண்டியது
சுருங்கச் சொன்னால் 1990களில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த நெறிமுறைகளைப் பின்பற்றச் சீனா மறுக்கிறது. குறிப்பாக ஓர் ஆண்டாக எல்லையில் அதிகளவில் ராணுவத்தைக் குவிக்கிறது.1993ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலிருந்து மேற்கொள்ள்பப்ட்ட LACஐ பின்பற்றச் சீனா மறுக்கிறது. அதற்குப் பதிலாகப் புதிதாக zone of actual controlஐ உருவாக்கச் சீனா முயல்கிறது. சீனா தனது திட்டத்தில் வெற்றிபெறாமல் இருக்க வேண்டும் என்றால், எல்லையில் தனது இருப்பை வலுப்படுத்துவதே இந்தியாவுக்கு இருக்கும் ஒரே லழி..!