மோசமான பாதிப்பை ஏற்படுத்திய.. டெல்டா வகையைவிட ஆபத்தான டெல்டா+.. என்ன வித்தியாசம்? வேக்சின் பலன்தருமா
டெல்லி: கொரோனா பாதிப்பு தற்போது மெல்லக் குறையத் தொடங்கியுள்ள நிலையில், டெல்டா வகை கொரோனா டெல்டா+ ஆக உருமாறியுள்ளது புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை கடந்த சில மாதங்களாக மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. தினசரி கொரோனா பாதிப்பு நாட்டில் நான்கு லட்சம் வரை கூட சென்றது.
கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்தது. 2ஆம் அலை ஏற்பட மக்கள் முறையாக கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது எனப் பல காரணங்கள் கூறப்பட்டன.
அதிமுக கொண்டு வந்தால் என்ன?.. மக்களுக்கு பயனுள்ளதுதானே.. மக்கள் பாராட்டும் அரசான திமுக!
உருமாறிய கொரோனா
இருப்பினும், அதில் முக்கியமானது உருமாறிய கொரோனா வகை. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா நாட்டில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வகையைவிட டெல்டா வகை கொரோனா வேகமாகப் பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர். உலக சுகாதார அமைப்பும் இதனைக் கவலைக்குரிய கொரோனா வகை எனப் பட்டியலிட்டது.
டெல்டா வகை
கொரோனா வகை பல முறை உருமாறியிருந்தாலும், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா என அழைக்கப்படும் b 1.617 உருமாறிய கொரோனா வேகமாகப் பரவியது. இந்த டெல்டா வகை கொரோனா மனித உடலில் இருக்கும் செல்களை எளிதில் வலிமையாகப் பற்றிக் கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருந்தது. இதன் மூலம் கொரோனா பரவல் வேகமானது.
டெல்டா பிளஸ்
இந்த டெல்டா வகை கொரோனா தற்போது மேலும் உருமாறி, டெல்டா பிளஸ் கொரோனாவாக உருவாகியுள்ளது. இந்த டெல்டா பிளஸ் கொரோனா K417N என்ற பிறழ்வைக் கொண்டுள்ளது. அதாவது கொரோனா வைரசின் வெளிப்புறத்தில் இருக்கும் புரத ஸ்பைக்கில் உருமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த உருமாறிய கொரோனா இம்யூன் எஸ்கேப் ஆற்றலையும் பெற்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது தடுப்பூசிகளுக்கு இதன் பலன் குறையலாம். இருப்பினும், இது குறித்து தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தடுப்பூசிகள் வேலை செய்யுமா
இந்த உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், இந்த உருமாறிய டெல்டா + கொரோனா வகை தடுப்பூசிகளுக்கு வேலை செய்யாது எனக் கூற குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. ஆனால், கொரோனா நோயாளிகளுக்குக் கொடுக்கும் ஆன்டிபாடி காக்டெய்ல் சிகிச்சைக்கு டெல்டா பிளஸ் பலன் அளிப்பதில்லை எனத் தெரிவித்துள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு Casirivimab & Imdevimab என்ற இரு ஆன்டிபாடி காக்டெய்ல் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஏன் மாறுகிறது
கொரோனா வைரஸ் என்று இல்லாமல் அனைத்து வைரஸ்களும் தொடர்ந்து உருமாறி கொண்டே தான் இருக்கும். நமது செல்களில் வைரஸ் தன்னை தானே உற்பத்தி செய்யும். அப்போது, சில சமயங்களில் பிழைகள் காரணமாக வைரஸின் மரபணுவில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே, வைரஸ் பரவலை விரைவாகக் கட்டுப்படுத்துவது மட்டுமே இதைத் தடுக்கும். அதற்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்த வேண்டும்.
கொரோனா 2ஆம் அலை
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை மெல்லக் குறைந்து வருகிறது. பல மாதங்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50ஆயிரமாகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை நாட்டில் மூன்று கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முறையான கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் 8 வாரங்களில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட என வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.