பணத்தை பத்திரமாக பாத்துக்கோங்க..நாட்டு மக்களுக்கு பெரிய ‛வார்னிங்'..மத்திய உள்துறை அமைச்சகம் தந்த அறிவுரை
டெல்லி: நம் நாட்டில் 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டு வருகிறது. இந்த மோசடி கும்பல்களை ஒழிக்க மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பத்திரமாக பார்த்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் செல்போன்களுக்கு போன் செய்யும் கும்பல், காவல்துறை சிபிஐ, சுங்கத்துறை, , டிராய் போன்ற அரசு நிறுவனங்களின் அதிகாரிகளாக நடித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
வீடியோ கால் வழியாக போலியான சீருடைகளை அணிந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர். இதனால் பயந்துபோகும் மக்கள் பணம் செலுத்தி ஏமாந்து போகின்றனர். குறிப்பாக வயதானவர்களை குறிவைத்தும், அதிக பணம் வைத்திருப்பவர்களை டார்க்கெட் செய்தும் இந்த மோசடி அரங்கேற்றப்பட்டு வருகிறது.
சமீபத்தில் குவாலியரில், 75 வயதான ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர் ரூ.1.12 கோடியை இழந்தார். அவரது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் முடக்கப்படும் என்று அச்சுறுத்தி அவரிடம் மோசடி கும்பல் பணம் பறித்தது. காவல்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் என்று கூறி, அந்த மோசடிக்காரர்கள் அந்த அதிகாரியை அவரது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைப் பணமாக மாற்ற சொல்லி, "சரிபார்ப்பு" என்ற பெயரில் பணத்தை மாற்றும்படி கூறி கையாடல் செய்தனர்.
அதேபோல் டெல்லியில் டாக்டர் தம்பதியிடம் 2 வாரங்களுக்கு மேல் வீட்டில் சிறை வைத்து ரூ.15 கோடியை ஒரு கும்பல் மோசடி செய்தது.
டிராய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் என்று கூறி இந்தத் தம்பதியினர் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி மிரட்டி மோசடி செய்தனர். இதுதொடர்பாக போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இத்தகைய மோசடிகளை நிதி குற்றங்களாக கருதி இதை விசாரிக்கவும், பணப் பரிமாற்றங்களைக் கண்காணிக்கவும் விரைந்து செயல்படுமாறும் மாநில காவல் துறை மற்றும் சைபர்கிரைம் பிரிவுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது.
அதன்படி எந்தவொரு அரசு துறை சார்ந்த அதிகாரிகளும் தொலைபேசி அல்லது வீடியோ கால் மூலமாக பொதுமக்களிடம் விசாரணை நடத்தாது. விசாரணை என்ற பெயரில் மிரட்டி பணத்தை கேட்காது. இதனால் இப்படியான போன்கால் மிரட்டல்கள் வந்தால் பொதுமக்கள் உடனடியாக அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளது. இல்லாவிட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உடனடியாகப் புகாரளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மத்திய உள்துறை அமைச்சகம் வங்கிகளுக்கு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மூத்த குடிமக்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து பெரிய ஆர்.டி.ஜி.எஸ். (RTGS) பரிமாற்றங்களுக்கு, முறையான சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த மோசடி கும்பல்களை முழுமையாக ஒழிக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்கவும் வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் சைபர்கிரைம் பிரிவுகளுடன் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications