நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட்.. நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்.. பரபர
டெல்லி: டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் ஒன்று திரண்டு பட்ஜெட்டை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்றைய தினம் பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, இந்த போராட்டம் இன்று நடந்து வருகிறது. இதனால் மிகப்பெரிய பரபரப்பு தலைநகரில் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நேற்றைய தினம் தாக்கல் செய்திருந்தார்.. லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த நிலையில், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலுமே அதிகரித்து காணப்பட்டது.

ஏமாற்றம்: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் தந்துவிட்டது.. பீகார், ஆந்திரா மாநிலங்களை திருப்திப்படுத்துவதாகவும், தமிழ்நாட்டிற்கு எந்த விதமான நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது மிகப்பெரிய அதிர்ச்சியை அரசியல் கட்சிகளிடமும், பொதுமக்களிடமும் நேற்றைய தினம் ஏற்படுத்திவிட்டது.
தமிழ்நாட்டுக்கு நலன் தரும் திட்டங்கள் ஒன்றுகூட இல்லாதது, மிகப்பெரிய ஏமாற்றத்தையும் தந்திருக்கிறது.. அதிலும் குறிப்பாக கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாசிய துறைகளில் நிதி எதுவுமே ஒதுக்கீடு செய்யாதது பெருத்த அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது.
நிதி ஒதுக்கீடு: ஆனால், பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு மட்டும் பட்ஜெட்டில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, பலரது கவனத்தையும் திருப்பி, கடுமையான விமர்சனத்தையும் உருவாக்கி வருகிறது. இதனால், எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இந்த பட்ஜெட்டை "காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் காப்பி-பேஸ்ட்" என்று விமர்சித்திருந்தார்.. பாஜகவின் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளும் பட்ஜெட், சாதாரண குடிமக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை, கூட்டாளிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றெல்லாம் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
பட்ஜெட்: பாஜகவை ஆதரித்த கட்சிகளின் மாநிலங்களை திருப்திப்படுத்தும் பட்ஜெட் இது என்றும், இந்த பட்ஜெட்டில் நீதி இல்லை, அநீதி அதிகமாக இருப்பதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் விமர்சித்தார். நேற்றைய தினம் பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே பார்க்கில் இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சித்தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எம்பிக்கள் ராகுல்காந்தி, கே.சி. வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா எம்பிக்கள் சஞ்சய் ராவத், அரவிந்த் சாவந்த், திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, திருச்சி சிவா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்பி மஹூவா மாஜி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, ஆம் ஆத்மி எம்பிக்கள் சஞ்சய் சிங், ராகவ் சாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இன்றைய தினம் டெல்லியில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
பரபரப்பு: அதுமட்டுமல்ல, பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, வரும் 27-ம் தேதி பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எப்போதுமே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, திருக்குறள் கூறுவதும், தமிழ் செய்யுள்களை மேற்கோள் காட்டியும் படிப்பது வழக்கம்.. ஆனால் நேற்றைய தினம் தமிழ் மற்றும் தமிழ்நாடு என்ற வார்த்தைகள் கூட உச்சரிக்கப்படாததும் தமிழக மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.. திட்டமிட்டே தமிழ் மற்றும் தமிழ்நாடு மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறதா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.
தமிழ், தமிழ்நாடு: இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்றைய தினம் போராட்டம் நடத்துவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட நிலையில், அதன்படியே, இன்று போராட்டம் நடந்து வருகிறது.. இன்று காலையிலேயே, நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பி க்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் எம்பிக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் தலைநகரில் பரபரப்பு நிலவி வருகிறது.
முன்னதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்கும்போது, "பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் பட்ஜெட்டில் கூற முடியாது. திட்டமிட்டே எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். மாநில பெயர்களை குறிப்பிடவில்லை என்றால் அது புறக்கணிப்பு என்று ஆகிவிடாது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications