இவ்ளோ நாள் வெயிட் பண்ணனுமா? 33% மகளிர் இடஒதுக்கீட்டில் “இக்” வைத்த மத்திய அரசு! கனிமொழி நோட்டீஸ்
டெல்லி: நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மக்களவையில் இன்று சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்யும் நிலையில், இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
கடந்த திங்கள் கிழமை 5 நாட்கள் நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாள் நாடாளுமன்ற கூட்டத்துக்கு பின் கேபினட் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 27 ஆண்டுகளுக்கு மேல் இருந்த முக்கிய கோரிக்கையான பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி முடிவு செய்யப்பட்டது.

இந்த சிறப்புக் கூட்டத் தொடரிலேயே அந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியானது. நேற்று பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிகழ்வுகளை முடித்துவிட்டு மதியம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. அங்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்தார்.
அப்போது புதிய நாடாளுமன்றத்தில் முதல் உரையை நிகழ்த்திய பிரதமர் மோடி, "மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு திங்கட்கிழமை கேபினட் ஒப்புதல் அளித்து. இதற்கு அனைத்து கட்சி எம்பிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாஜ்பாய் ஆட்சியின்போது பல முறை இந்த மசோதா கொண்டு வரப்பட்டும், எம்பிக்கள் எண்ணிக்கை அதிகம் இல்லாததால் அது நிறைவேறவில்லை.
பல ஆண்டுகளாக இந்த மசோதாவை சுற்றி எண்ணற்ற விவாதங்கள், சர்ச்சைகள் எழுந்தன. நாடாளுமன்றத்தை இந்த மசோதாவை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகள் முந்தைய காலங்களில் மேற்கொள்ளப்பட்டன. 1996 ஆம் ஆண்டு இது தொடர்பாக முதல் முறையாக மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. மகளிர் உரிமையை நிறைவேற்றவும், அவர்களின் சக்தியை பல்வேறு நற்செயல்களுக்கு பயன்படுத்துவதற்காகவும் கடவுள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார். " என்று கூறினார்.
இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்த திமுக எம்பி கனிமொழி, "முக்கியமான இந்த மசோதாவை தாக்கல் செய்த அரசின் செயல்பாடு குறித்து விமர்சனங்கள் எழுந்து உள்ளன. மசோதாவை கொண்டுவருகிறோம் என்று கூறிவிட்டு, தொகுதி மறுவரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகுதான் செயல்படுத்துவோம் என சொல்வது கண்துடைப்பு.
இந்த தேர்தலுக்காக இந்த மசோதாவை கொண்டு வந்ததாக தெரியவில்லை. ஆனால் தேர்தலுக்கான அறிவிப்பு என்றே கருதப்படுகிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்தோம். இவ்வளவு பெரிய விஷயத்தை பெண்களுக்காக நாங்கள் செய்துள்ளோம் என வாக்கு வங்கிக்காக அவர்கள் இதை கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது." என்றார்.
இந்த நிலையில் இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில், "மகளிர் இடஒதுக்கீட்டை உடனே செயல்படுத்தும் விதமாக மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை வரை காத்திருக்கக்கூடாது." என அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications