பால், தயிரை விடுங்க.. கோமியத்திற்கு 50% கூட ஜிஎஸ்டி ஏத்திக்கோங்க.. மக்களவையில் திமுக எம்பி தாக்கு
டெல்லி: பால், தயிர் மீதான ஜிஎஸ்டி விலை உயர்வை விட்டுவிட்டு கோமியத்தின் மீது 50 சதவீதம் கூட ஜிஎஸ்டியை ஏற்றிக் கொள்ளுங்கள் என மக்களவையில் திமுக எம்பி செந்தில் குமார் விமர்சனம் செய்துள்ளார்.
பால், உருளைக்கிழங்கு, தயிர், கோதுமை மாவு, அரிசி உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து ஜிஎஸ்டி விலை உயர்வை திரும்ப பெறுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனால் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறுகின்றன.

திமுக எம்பி செந்தில் குமார்
திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் மக்களவையில் பேசிய வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பாஜக அரசு கார்பரேட் அரசுகளுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது. பால், தயிர், உருளைக்கிழங்கு போன்றவற்றின் விலையை நீங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.

சாமானியர்கள்
இப்படி இருந்தால் சாமானியர்களால் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும் என எதிர்பார்க்கிறீர்கள். சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகம் தேவைப்படும் பால் போன்ற பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ஒரு பொருளுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்தினால் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை.

மாட்டு கோமியம்
அந்த பொருள் மாட்டு கோமியம். அவற்றிற்கு உச்சபட்ச ஜிஎஸ்டி வரியை விதித்துக் கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு ஏன் சாமானிய மக்களை பாதிக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும்? எப்போது தேர்தல் வந்தாலும் நாம் எதை பார்க்கிறோம். எரிப்பொருட்களின் விலைகள்!

சமையல் எரிவாயு சிலிண்டர்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்து காணப்படும். இவர்கள் தேர்தலில் வென்றவுடன் விலையை மீண்டும் படிப்படியாக அதிகரிக்கிறார்கள். இத்தகைய நடைமுறைக்கு நாங்கள் எதிரானவர்கள். இதனால்தான் திராவிட மாடலை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். திராவிட மாடல்- தாழ்த்தப்பட்ட மக்கள், விளிம்பு நிலை சார்ந்து அமையும். அதே போல் நரேந்திர மோடியின் அரசாங்கம் கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக அமைவதை பார்க்கிறோம். நன்றி. இவ்வாறு மக்களவையில் திமுக எம்பி செந்தில்குமார் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications