திமுகவா? தவெகவா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு.. ஆலோசனையின் பின்னணி
டெல்லி: தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இப்போது கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் திமுக கூட்டணியில் தொடர விரும்புகின்றனர். இன்னொரு தரப்பினர் விஜயின் தவெக உடன் கைகோர்க்க விருப்பம் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தான் தமிழக காங்கிரஸ் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, கேசி வேணுகோபால் பங்கேற்றுள்ளனர்.

தமிழகம் சார்பில் மாநில தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், எம்பி, எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் வரக்கூடிய சட்டசபை தேர்தலில் எந்த கூட்டணியில் இணைய வேண்டும் என்பது பற்றி அவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவிப்பார்கள். அதனை பரிசீலனை செய்து காங்கிரஸ் மேலிடம் இறுதி முடிவு எடுக்க உள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியை எடுத்து கொண்டால் செல்வபெருந்தகை, ப சிதம்பரம் உள்பட இன்னும் பலர் திமுக கூட்டணியை தொடர வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், கரூர் எம்பி ஜோதிமணி உள்பட இன்னும் சிலருக்கு இந்த கூட்டணியில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
மாணிக்கம் தாகூர் நேரடியாக திமுகவை சீண்டி வருகிறார். தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும் என மாணிக்கம் தாகூர் உள்பட பல நிர்வாகிகள் கோரிக்கை விடுக்கின்றனர். அதேவேளையில் விஜய் தன்னுடன் கூட்டணி வருவோருக்கு ஆட்சி அதிகாரத்தில் இடம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் அந்த தலைவர்கள் தவெக கூட்டணியை விரும்புகின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இந்த விவகாரம் கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி திமுகவுக்கும், காங்கிரஸ் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் காங்கிரஸ் - திமுக இடையே சமூக வலைதளங்களில் மோதல் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications