ரவீந்திரநாத் வெற்றி ரத்து- உச்சநீதிமன்றத்தில் திமுக தங்க தமிழ்ச்செல்வன் திடீர் கேவியட் மனு
டெல்லி: அதிமுக எம்பி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது வழக்கு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் திமுகவின் தங்க தமிழ்ச் செல்வன் திடீரென கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். 2019 லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் தங்க தமிழ்ச் செல்வன்.
2019-ம் ஆண்டு தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு எதிராக திமுகவின் மிலானி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ரவீந்திரநாத் தமது வேட்புமனுவில் பல்வேறு உண்மை தகவல்களை மறைத்திருப்பதாகவும் அதில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது. இருப்பினும் ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்வதற்காக இத்தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது வழக்கு விவகாரத்தில் திமுகவின் தங்க தமிழ்ச் செல்வன் உச்சநீதிமன்றத்தில் திடீரென கேவியட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்; அப்போது தமது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்பதற்காக தங்க தமிழ்ச் செல்வன் இந்த கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுகவின் ரவீந்திரநாத், காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். அத்தேர்தலில் ரவீந்திரநாத் 5,04,813; ஈவிகேஎஸ் இளங்கோவன் 4,28,120 வாக்குகள் பெற்றனர். அமமுக வேட்பாளராகப் போட்டியிட்ட தங்க தமிழ்ச் செல்வன், 1,44,050 வாக்குகள் பெற்றிருந்தார். பின்னர் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச் செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications