சிறுபான்மை ஜாதியினருக்கு முதல்வர் பதவி.. ஜார்க்கண்ட்டிலும் தோல்வியை தழுவிய பாஜக பார்முலா
டெல்லி: சிறுபான்மை ஜாதியினருக்கு முதல்வர் பதவி அளித்து வந்த பாஜகவின் பார்முலா ஜார்க்கண்ட்டிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது.
பல மாநிலங்களில் பெரும்பான்மை ஜாதியைச் சேர்ந்தவர்களையே முதல்வராக தேர்வு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இதனை பாஜக நிராகரித்து சிறுபான்மை ஜாதியினரை முதல்வராக்கியது.
உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள்தான் முதல்வராக பதவி வகித்தனர். ஆனால் தாக்கூர் ஜாதியை சேர்ந்த யோகி ஆதித்யநாத்தை பாஜக முதல்வராக்கியது. இதனால் பிராமணர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். இவர்களை சமாதானப்படுத்தி லோக்சபா தேர்தலில் வாக்கு வங்கியாக தக்க வைக்க பாஜக பகீரத பிரயத்தனம் செய்தது.

மனோகர் லால் கட்டார்
ஹரியானாவில் பஞ்சாபி ஜாதியை சேர்ந்த மனோகர் லால் கட்டாரை முதல்வராக்கியது பாஜக. இதில் கொதித்துப் போன பெரும்பான்மை ஜாதியினரான ஜாட்கள், பாஜகவுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் பெரும்பான்மையை பெற முடியாத நிலைக்குப் போனது பாஜக. தற்போது ஜேஜேபி தலைவர் துஷ்யந்த சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து ஆட்சியில் இருக்கிறது பாஜக.

பட்னாவிஸுக்கு பதவி
மகாராஷ்டிராவில் மராத்தா ஜாதியினருக்குதான் முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் சிறுபான்மையினராக உள்ள பிராமணர் ஜாதியை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸுக்கு முதல்வர் பதவியை கொடுத்தது பாஜக.

பாஜக அதிகாரம் இழப்பு
இதனால் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மராத்தாக்கள், தலித்துளாகிய மகர்கள் மற்றும் முஸ்லிம்கள் பாஜகவுக்கு எதிராக இணைந்து நின்றனர். இதனால் பாஜக அதிகாரத்தை பறிகொடுத்தது.

ஓபிசிக்கு முதல்வர் பதவி
இதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி ஜாதியை சேர்ந்தவர்தான் முதல்வராக்கப்பட்டு வந்தனர். இதற்கு மாறாக இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ரகுபர்தாஸை முதல்வராக்கியது பாஜக.

பாஜகவுக்கு எதிராக வாக்கு
இதனால் கடும் அதிருப்தி அடைந்த பழங்குடி மக்கள் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ்-ஜேஎம்எம்- ஆர்ஜேடி கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். பாஜகவின் ரகுபர்தாஸ் ஆட்சிக் காலத்தில் பழங்குடிகளின் நிலத்தை கார்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க வகை செய்யும் சட்டத்தை கொண்டுவந்தார். இது ஒட்டுமொத்தமாக பழங்குடி மக்களின் அதிருப்திக்கு வழிவகுத்தது. இதனைத்தான் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன.












Click it and Unblock the Notifications