பூஜ்ஜியத்தை நோக்கி வேகமாக நகரும் வெப்பநிலை!கிடுகிடுக்கும் டெல்லி..விமான பயணிக்கு பறந்து வந்த அட்வைஸ்
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், விமான போக்குவரத்து உட்பட பல போக்குவரத்து சேவைகள் சிறிய அளவு பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி தற்போது 1 டிகிரி செல்சியஸை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விமான பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
கடந்த டிசம்பரில் தொடங்கிய பனியானது இந்த ஜனவரி இறுதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடமாநிலங்களில் பஞ்சாப், ராஜஸ்தான் தொடங்கி கிழக்கே உத்தரப் பிரதேசம், பீகார் வரை கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லியும் இந்த பனி பாதிப்பிலிருந்து தப்பவில்லை. இம்மாநிலங்களை மூடுபனியானது போர்த்தியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.
டெல்லியை பொறுத்த அளவில் பனியானது உறைநிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தென்மேற்கு டெல்லியின் அயநகரில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 1.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதேபோல மைனஸ்க்கு வெப்பநிலை சென்றுவிட்டால் உறைபனி பெய்யத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியை பொறுத்த அளவில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 4-5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சுமார் 16 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இன்னும் 4 நாட்களுக்கு
இதன் காரணமாக 10 மீட்டர் தொலைவில் உள்ள பொருட்களை மட்டுமே பார்க்க முடியும். இதே நிலைமை அடுத்த 4-5 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. டெல்லியாவது பரவாயில்லை. ராஜஸ்தானில் பல பகுதிகள் தற்போது 0 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. ஆனால் இதற்கு நேர்மாறாக தென் மாநிலங்களில் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்வைஸ்
இந்நிலையில் விமான போக்குவரத்து குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதாவது, தற்போதைய நிலையை பொறுத்த அளவில் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் அனைத்தும் சீராக இயங்கி வருவதாகவும், இருப்பினும் பயணத்திற்கு முன்னதாக விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட விமானத்தின் இயக்கம், அடுத்த விமானத்தின் இயக்கம் ஆகியவற்றை பயணிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை இதே நிலை நீடித்தால் விமான போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

சர்வதேச அளவில்
இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு காரணமாக விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 83 செ.மீ அளவில் பனி படர்ந்துள்ளதால் வாகன போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 5,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 40 ஆண்டுகளில் பதிவான குளிரை விட அதிகமாகும். மின்சாரம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுமார் 25 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடைகள் இந்த பனியை தாக்குப்பிடிக்க முடியாமல் உயிரிழந்துள்ளன.

அதிசயம்
மற்றொருபுறம் பூமியானது சூரியனுக்கு மிக அருகில் வந்திருக்கிறது. அதாவது சூரியனுக்கும் பூமிக்கு இடையேயான தொலைவு ஒரு வானியல் அலகு என்று அழைக்கப்படும். ஆனால் நேற்றைய தினம் சூரியன் 0.9833 வானியல் அலகு எனும் அளவில் பூமிக்கு நெருக்கமாக வந்திருந்தது. இருப்பினும் உலகம் முழுவதும் கடும் குளிர் வாட்டி வதைத்தது. இதற்கு காரணம் பூமி 23.44 டிகிரி சாய்வாக இருப்பதுதான் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இவ்வாறு சாய்வாக இருப்பதால் சூரியனின் வெப்பம் பூமியை நேரடியாக தாக்காது என்று விளக்கமளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications