கொரோனா 2-வது அலை காரணமாக.. தினசரி ரயில்கள் பாதியாக குறைப்பு.. 1,500 ரயில்களில் 865 மட்டுமே இயக்கம்!
டெல்லி: கொரோனா இரண்டாவது அலை காரணமாக தினமும் வழக்கமாக இயக்கப்படும் 1,500 ரயில்களில் தற்போது 865 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை கொரோனாவின் முதல் அலை நீடித்தது.
இந்த ஆண்டின் மார்ச்சுக்கு பிறகு கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் இருந்து வருகிறது. கொரோனா காரணமாக நாட்டில் ரயில், விமான சேவைகள் பாதிக்கப்ட்டுள்ளன.

ரயில் சேவை பாதிப்பு
அதாவது இந்தியாவில் கொரோன தொற்று விஸ்வரூபமெடுத்த தொடக்க காலத்தில் இருந்தே ரயில் சேவை பாதிக்கப்ட்டது. இதுவரை ரயில் சேவை இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. அதாவது இந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் சுமார் 3.27 கோடி மக்கள் நீண்ட தூர ரயில் பயணத்தை மேற்கொண்டனர்.கடந்த 2019-ம் ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் 30 கோடி பயணிகள் நீண்ட தூர ரயில்களில் பயணித்துள்ளனர்.

பாதியாக குறைந்தது
இந்த ஆண்டு மே மாதத்தில் இதுவரை 1.76 கோடி பயணிகள் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பயணிகள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வழக்கமான ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதாவது இரண்டாவது அலையின் காரணமாக தினமும் வழக்கமாக இயக்கப்படும் 1,500 ரயில்களில் தற்போது 865 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன என்று தரவுகள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு எப்படி?
கொரோனா தொற்றின் 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஒவ்வொரு நாளும் 1,768 நீண்ட தூர ரயில்கள் ஓடியது. இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ரயில் போக்குவரத்து ஓரளவு மீட்சியடைய தொடங்கியது.
இதற்கு உதாரணமாக பிப்ரவரியில் 7.5 கோடி பயணிகள் நீண்ட தூர மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்களை பயன்படுத்தியதாகவும், மார்ச் மாதத்தில் 5.8 கோடி பயணிகள் நீண்ட தூர மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்களை பயன்பபடுத்தியதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் காட்டுகின்றன.

பொது பெட்டிகளில் எத்தனை பேர்?
ஏப்ரல் 1 முதல் தொடங்கும் இந்த நிதியாண்டில் 2.72 கோடி பயணிகளில் பாதி பேர் நீண்ட தூர ரயில்களின் பொது பெட்டியில் பயணித்ததாக தரவு காட்டுகிறது (வழக்கமாக பொது பேட்டி. முன்பதிவு செய்யப்படாது. தற்போது கொரோனா காரணமாக இதில் முன்பதிவு செய்யப்படுகிறது) குளிர்சாதன வசதி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் சுமார் 1.65 கோடி மக்கள் பயணம் செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications