துஷார் மேத்தாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. சொலிசிட்டர் ஜெனரலாக மேலும் 3 ஆண்டு பதவி நீட்டிப்பு!
டெல்லி: இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக இருக்கும் துஷார் மேத்தாவின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீடித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே இவரது பதவிக்காலம் கடந்த 2020ம் ஆண்டில் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.
இந்தியாவின் தலைமை சட்ட அதிகாரி பதவிக்கு அடுத்தபடியாக உள்ள பதவி சொலிசிட்டர் ஜெனரல்தான். மத்திய அரசின் குரலாக, கருத்துக்களை நீதிமன்றங்களில் இவர்தான் முன்வைப்பார். தற்போது சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா பதவி வகித்து வருகிறார்.

இந்த பதவிக்கு யாரை நியமனம் செய்வது என பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் நியமனக்குழுதான் முடிவெடுக்கும். அந்த வகையில் தற்போது இந்த நியமனக்குழு மேத்தாவின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்திருக்கிறது.
செந்தில் பாலாஜியின் வழக்கு உட்பட பல வழக்குகளில் மத்திய அரசின் வாதங்களை கூர்மையாக கொண்டு செல்பவராக மேத்தா அனைவராலும் அறியப்பட்டுள்ளார். இந்நிலையில் மேத்தாவுடன் சேர்த்து, ஏற்கெனவே கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த விக்ரம்ஜித் பானர்ஜி, கே.எம்.நடராஜன், பல்பீர் சிங், எஸ்.வி.ராஜு, என்.வெங்கடராமன் மற்றும் ஐஸ்வர்யா பாடி ஆகியோர் மீண்டும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி அப்போது சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த துஷார் மேத்தாவின் பதவிக்காலம் முடிந்தது. இதனையடுத்து மீண்டும் அவரை சொலிசிட்டர் ஜெனரலாக மத்திய அரசு நியமித்து, 3 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார் என்று அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications