ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 6.1 ஆக பதிவு- வட இந்திய மாநிலங்களும் குலுங்கின!
டெல்லி: ஆப்கானிஸ்தானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.1 அலகுகளாகப் பதிவாகின. ஆப்கான் நிலநடுக்கம் எதிரொலியாக வட இந்திய மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று பிற்பகல் 2.50 மணி அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 241 கி.மீ தொலைவில் வடக்கு வடகிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ்ம் மலைகளை மையமாக வைத்து ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி இருந்தது.

இதனால் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் கட்டிடங்கள் அதிவேகமாக குலுங்கின. ஆப்கானிஸ்தானில் சில மாதங்களுக்கு முன்னர் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நிலநடுக்கத்தில் சுமார் 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனால் தற்போதைய நிலநடுக்கமும் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியது.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தியா, பாகிஸ்தான் பகுதிகளிலும் நில அதிர்வை எதிர்கொள்ளும். பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டன.
இந்தியாவில் தலைநகர் டெல்லி உட்பட வட இந்திய மாநிலங்களில் கட்டிடங்கள் குலுங்கின. டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்களில் தஞ்சமடைந்தனர். இந்த நில அதிர்வு வட மாநிலங்களில் அச்சத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications