மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
டெல்லி: பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் மக்களவை மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்குச் சமீபத்தில் தான் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் மொத்தம் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ள நிலையில், ஆம் ஆத்மி முதல்முறையாக அங்கு ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் மக்களவை மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் தலா ஒரு மக்களவை மற்றும் சட்டசபை தொகுதி, பீகார், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டசபை தொகுதி ஆகியவற்றுக்கு வரும் ஏப். 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 17ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் நிலையில், வரும் மார்ச் 24 வரை வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யலாம். மார்ச் 25இல் வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்பு மனுவைத் திரும்பப் பெற மார்ச் 28 கடைசி நாளாகும்.
மேலும், வரும் ஏப். 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், வரும் ஏப்ரல் 16ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications