"மோடி பயங்கரவாதி"..வாயைவிட்ட மல்லிகார்ஜூன கார்கேவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.. 24 மணிநேரம் கெடு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியை பயங்கரவாதி என்று கூறியது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் தான் பேச்சு தொடர்பாக 24 மணிநேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கெடு விதித்து மல்லிகார்ஜூன கார்கேவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற உள்ளது. முன்னதாக நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிந்தது. இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் திமுக - காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதுமட்டுமின்றி பாஜக மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த சமயத்தில் மல்லிகார்ஜூன கார்கே, '' அவர் (பிரதமர் மோடி) ஒரு பயங்கரவாதி. அவரது கட்சிக்கு சமநீதி, நீதி உள்ளிட்டவற்றின் மீது நம்பிக்கை என்பது கிடையாது. இவர்கள் தான் அவர்களுடன் (அதிமுக) கூட்டணி வைத்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் (அதிமுகவினர்) ஜனநாயகத்தின் வலுவை குறைக்கின்றனர். அண்ணாதுரை, காமராஜ், பெரியார், கருணாநிதி, அம்பேத்கர் உள்ளிட்டவர்களின் கொள்கைகளை வலுவிழக்க செய்கின்றனர்'' என்றார்.
பிரதமர் மோடியை பயங்கரவாதி என்று மல்லிகார்ஜூன கார்கே கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பல தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால் மல்லிகார்ஜூன கார்கே மன்னிப்பு கோரவில்லை. மாறாக தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தில், ''பிரதமர் மோடியை நான் பயங்கரவாதி (Terrorist) என அழைக்கவில்லை. மக்களையும் அரசியல் கட்சிகளையும் அவர் அச்சுறுத்தி வருகிறார் (Terrorising people and political parties) என்று தான் தெரிவித்தேன்'' என்று கூறியிருந்தார்.
இருப்பினும் மல்லிகார்ஜூன கார்கேவின் இந்த விளக்கத்தை பாஜகவினர் ஏற்கவில்லை. இதனால் மல்லிகார்ஜூன கார்கே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பாஜக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜூஜூ உள்பட மூத்த தலைவர்கள் இன்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கேவிற்க இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதன்படி அடுத்த 24 மணிநேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மல்லிகார்ஜூன கார்கே சிக்கலில் சிக்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications