தேர்தல் ஆணையத்தை பாஜகவுடன் இணைத்து விடுங்கள்.. தலைமை தேர்தல் ஆணையரை சாடிய எம்பி ஜான் பிரிட்டாஸ்
டெல்லி: ‛‛தேர்தல் ஆணையம் பாஜகவின் ‛பி' டீம். இந்திய தேர்தல் ஆணையத்தை பாஜகவுடன் இணைக்க வேண்டும். இதன்மூலம் கோடிக்கணக்கான பணத்தை மிச்சப்படுத்த முடியும்'' என்று கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ஜான் பிரிட்டாஸ் கொந்தளித்துள்ளார்.
பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதோடு கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா - ஹரியானா சட்டசபை தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், கடைசி நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் உள்ளிட்டவற்றில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் குற்றம்சாட்டினார்.

மேலும் ஒரே முகவரியில் ஏராளமானவர்கள் வாக்குரிமை பெற்றிருப்பதை அவர் விளக்கி இருந்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ராகுல் காந்தியின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நிராகரித்தார்.
இந்நிலையில் தான் தேர்தல் ஆணையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்பி ஜார் பிரிட்டாஸ் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் அளித்த பேட்டியில், "ஞானேஷ் குமார் (இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர்) குறைந்தபட்சம் ஒரு உண்மையை கூறியுள்ளார். கோடிக்கணக்கான மக்கள் வீடுகள் இன்றி தெருக்களில் உள்ளனர். அவர்களுக்கு வீட்டு எண் 0 என்று கூறியுள்ளார்.
அப்படி இருக்கும்போது பெற்றோர் இல்லாத கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனாதைகள். அதனால்தான் அவர்களின் பெற்றோரின் பெயர் ABCDEFG என்று அவர் கூறுவாரா? அதுபற்றி அவர் விளக்கம் அளிக்க வேண்டும். எனவே, நாட்டின் வளங்கள், பணத்தை மிச்சப்படுத்த தேர்தல் ஆணையத்தை பாஜகவுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதே சிறந்த வழி?
அரசியல் கட்சியின் பி டீமாக இருக்கும் இதுபோன்ற நிறுவனங்களை நடத்துவதற்கு நாம் ஏன் இவ்வளவு வரி செலுத்த வேண்டும்?. நம் நாடு அரசியலமைப்பின்படி செயல்படும் ஒரு அமைப்பின் மீதான நம்பிக்கையை இப்போது இந்துவிட்டது. ஏனென்றால் அவர் 3ம் தர அரசியல்வாதியை போல் பேசினார்'' என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications