சொந்த ஊருக்கு செல்ல தேவையில்லை.. ‘ரிமோட் வோட்டிங்’கில் வாக்களிக்கலாம் - தேர்தல் ஆணையம் திட்டம்!
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம் சோதனை அடிப்படையில் தொலைதூர வாக்களிப்புக்கான (ரிமோட் வோட்டிங்) சாத்தியக்கூறுகளை ஆராயத் தொடங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்த வாக்காளர்களின் பிரச்சனைகளை ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தக் குழு அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை கேட்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு புகார்: கோவில்பட்டி ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 3-வது நாளாக இன்றும் ஐடி ரெய்டு
தொலைதூர வாக்குப்பதிவுக்கு பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து சென்னை ஐஐடி-யுடன் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் வாக்காளர்கள்
நாடு முழுவதும் புலம்பெயர் வாக்காளர்கள் அதிகளவில் உள்ளனர். தேர்தல் நேரத்தில் இவர்கள் அனைவராலும் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க முடியாத சூழல் உள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் வெகுவாகக் குறைவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம். இவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்வதற்காக தொலைதூர வாக்குப்பதிவு வசதியை அறிமுகம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் ஏற்கெனவே திட்டமிட்டது.
வாக்களிக்க முடியவில்லை
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் தொலைதூர மலைக் கிராமங்களான துமக் மற்றும் கல்கோத் ஆகிய பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளை 18 கி.மீ தூரம் மலையேறிச் சென்று பார்வையிட்டார். இந்த கிராமங்களிலும் 20 முதல் 25 சதவீத வாக்காளர்களால் வாக்களிக்க முடியவில்லை. இவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளியிடங்களில் உள்ளதால் தேர்தல் நேரத்தில் வர முடிவதில்லை என அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவித்தனர்.
சோதனை அடிப்படையில்
இதனால் சோதனை அடிப்படையில் தொலைதூர வாக்குப் பதிவுக்கான சாத்தியங்கள் குறித்து ஆராய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வாக்காளர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்கலாம் என்ற வாய்ப்பு குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
ரிமோட் வோட்டிங்
அதில், கல்வி மற்றும் வேலை போன்ற காரணங்களுக்காக புலம்பெயர்ந்த வாக்காளர்களால், தேர்தல் நாளில் சொந்த ஊர் வருவது சிரமமாக உள்ளது. அதனால் சோதனை அடிப்படையில் தொலைதூர வாக்குப்பதிவு வசதியை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. புலம்பெயர் வாக்காளர்களின் பிரச்சினைகளை ஆராய குழு ஒன்று அமைக்கப்படும். இது தொடர்பாக வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்கப்படும்.
நகரங்களில் குறைவு
கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் சில நகர்ப்புற தொகுதிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குப்பதிவு இருந்தது. இங்கு 2 கி.மீ தூரத்துக்குள் வாக்குச்சாவடி அமைத்தும் அதிக வாக்குகள் பதிவாகவில்லை. இந்தப் பிரச்சனை குறித்தும் ஆராயப்படும்.
ஐஐடி குழு
தொலைதூர வாக்குப்பதிவுக்கு பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து சென்னை ஐஐடி-யுடன் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. இதற்காக தொழில்நுட்ப ஆலோசனை குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு பிலாய் ஐஐடி இயக்குனர் ராஜட் மோனா தலைமை வகிக்கிறார். இந்தக் குழுவில் டெல்லி, மும்பை ஐஐடி நிபுணர்கள் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.