'தேர்தல் பத்திரம்' உலகின் பெரிய ஊழல்-பாஜகவுக்கு நிச்சயம் கடும் தண்டனை- நிர்மலா சீதாராமன் கணவர் பகீர்
டெல்லி: "தேர்தல் பத்திரம்" இந்தியாவில் மட்டுமல்ல.. உலகத்திலேயே மிகப் பெரிய ஊழல்.. தேர்தல் பத்திர ஊழலுக்காக இந்திய மக்கள், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு நிச்சயம் கடுமையான தண்டனையைத் தரப் போகிறார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார வல்லுநருமான பரகலா பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர், மத்தியில் ஆளும் பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை மிகவும் காட்டமாக எதிர்த்தும் வருகிறார்.

நாட்டையே அதிர வைத்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக டிவி சேனல் ஒன்றுக்கு பரகலா பிரபாகர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்ற விவகாரம் இப்போது இருப்பதை விட இன்னமும் அதிவேகமாக விஸ்வரூபம் எடுக்கப் போகிறது. ஒவ்வொருவருமே தேர்தல் பத்திரத்தின் மூலமான ஊழலைப் புரிந்து கொள்ள தொடங்கிவிட்டனர்.
தேர்தல் பத்திர ஊழல் என்பது இந்தியாவில் மட்டும் மிகப் பெரிய ஊழல் அல்ல. ஒட்டுமொத்த உலகத்திலேயே மிகப் பெரிய ஊழல்தான் தேர்தல் பத்திர முறைகேடு என்பது. இப்போது தேர்தல் பத்திர ஊழல் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. தேர்தல் பத்திர ஊழல் முறைகேடு என்பது ஏதோ இரண்டு கூட்டணிகளுக்கு இடையேயான விவகாரமோ மோதலோ அல்ல. நாட்டு மக்களுக்கும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் இடையே மோதலாகவே தேர்தல் பத்திர ஊழல் உருவெடுத்திருக்கிறது. இதற்காக மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு மக்கள் மிக கடுமையான தண்டனையைத்தான் தரப் போகின்றனர். இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல்வேறு நிறுவனங்களை மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகள் மூலம் மிரட்டி மத்தியில் ஆளும் பாஜக அரசானது தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் பெருமளவு பணம் பெற்றுள்ளது அண்மையில் அம்பலானது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்டவைகளின் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் 41 நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ2,471 கோடியை பாஜகவுக்கு கொடுத்திருக்கிறது; சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகளுக்குப் பின்னர் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் இந்த 41 நிறுவனங்கள் ரூ1,698 கோடியை கொடுத்துள்ளன என்பது குற்றச்சாட்டு. தேர்தல் பத்திரங்களை சட்டவிரோதமானவை என உச்சநீதிமன்றம் பிரகடனம் செய்தது. அத்துடன் தேர்தல் பத்திரங்கள் மூலமாக மத்தியில் ஆளும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை கடுமையான உத்தரவுகளால் உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications