ED இயக்குனரின் பதவிக்காலத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி.. மத்திய அரசுக்கு காட்டமாக கேள்வி
டெல்லி: அமலாக்கத்துறை இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத் துறை இயக்குநராக உள்ள சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை 3-வது முறையாக நீட்டித்தது சட்ட விரோதம் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இது தொடர்பான வழக்கில், சஞ்சய் குமார் மிஸ்ரா ஜூலை 31 ஆம் தேதி வரை மட்டுமே அந்த பதவியில் இருக்கலாம் எனவும் தெரிவித்து இருந்தது. கடந்த 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில், மீண்டும் அவருக்கு பணி நீட்டிப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே மிஸ்ரா செப். 15 ஆம் தேதி வரை பதவியில் நீடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வழக்கு விசாரணையின் போது, அமலாக்கத்துறையில் எஸ்.கே மிஸ்ரா மட்டுமே தகுதி வாய்ந்த நபரா என காட்டமாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 15 ஆம் தேதி நள்ளிரவு பதவிக் காலம் நிறைவு அடைந்ததாக கருதப்படும். அதன்பிறகு எக்காரணத்தை கொண்டும் நீட்டிக்கப்படாது" என்றும் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications