காங்கிரசில் ஏற்படும் மோதலுக்கு மோடி காரணமா? புட்டு புட்டு வைத்த குலாம் நபி ஆசாத்.. மேட்டரே வேறயாம்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த குலாம் நபி ஆசாத் சமீபத்தில் கட்சியை விட்டு விலகிய நிலையில், அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என வற்புறுத்தப்படுவதாக கூறியுள்ளார்.
கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கடும் தோல்விகளை சந்தித்ததையடுத்து கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக கட்சியின் முக்கிய பொறுப்புகளை விட்டும் கட்சியை விட்டும் வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் கட்சியை விட்டு வெளியேறி குலாம் நபி ஆசாத், இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கட்சிக்கும் தனக்கும் இருந்த முரண்களை கூறியுள்ளார்.
கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் கடும் தோல்வி, 2014 மற்றும் 2022க்கு இடையில் நடந்த 49 சட்டமன்றத் தேர்தல்களில் 39ல் தோல்வியடைந்தது ஆகியவை காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டு வந்த நிலையில், இந்திய அரசியலின் மிக மூத்த தலைவர்களை தங்களகத்தே கொண்டிருப்பது மட்டுமே கட்சியின் பெரும் பலமாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த மூத்த தலைவர்கள் பலர் ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதன் உச்சக்கட்டமாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது காங்கிரசுக்குள் மட்டுமல்லாது இந்திய தேசிய அரசியலில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு கட்சியை விட்டு விலகும் தலைவர்கள் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தே விலகுகின்றனர். தனது ராஜினாமா குறித்து அவர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், "ராகுல் காந்தி முதிர்ச்சியில்லாமல் நடந்து கொள்கிறார்" என குலாம் நபி ஆசாத் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆசாத், தான் வீட்டிலிருந்து வெளியேறுமாறு கட்டாயப்படுத்துவதாக கூறியுள்ளார். மேலும், "கட்சியின் நிலை குறித்து அதன் தலைமைக்கு கடிதம் எழுதியதிலிருந்து கட்சி தலைமை என்மீது விமர்சனங்களை கொண்டுள்ளது. மோடியை குறிப்பிடுவது என்பது வெறும் காரணம் மட்டுமே. அவர்களை எதிர்த்து யாரும் எழுத கூடாது, கேள்வியெழுப்பக்கூடாது. அதை அவர்கள் விரும்புவதில்லை.
நாங்கள் எழுதிய கடிதங்கள் குறித்து பல கூட்டங்கள் நடைபெற்றன. ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த கடிதத்தை எழுதியதற்கு பின்னரும் அதற்கு முன்னரும் 6 நாட்கள் வரை நான் தூங்கவில்லை. ஏனெனில் நாங்கள் ரத்தம் சிந்தி இந்த கட்சியை வளர்த்திருக்கிறோம். இன்று அங்குள்ளவர்கள் பயனற்றவர்கள். எங்களை பற்றி அறியாத காங்கிரசுக்கு இப்படிப்பட்ட பேச்சாளர்கள் இருப்பது வருத்தம் அளிக்கிறது." என்று கூறினார்.
காங்கிரஸிலிருந்து வெளியேறும் தலைவர்கள் பாஜகவில் இணைவதால் இது தொடர்பான குற்றச்சாட்டும் ஆசாத் மீது வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், "பிரதமர் மோடி ஒரு கசப்பான மனிதர் என்று நினைத்தேன் ஆனால் அவர் மனித நேயத்தை வெளிப்படுத்தினார்" மேலும், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டிப்பிடித்த சம்பவத்தை மேற்குறிப்பிட்டு, "மோடியிடம் சிக்கியது நான் அல்ல, ராகுல்தான்" என்று கூறியுள்ளார்.
"30 ஆண்டுகளுக்கு முன்பு சோனியா காந்தி மீது எனக்கு இருந்த மரியாதை, ராகுல் காந்திக்கு உரியது. தனிப்பட்ட முறையில் அவரின் நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்திக்கிறேன். நாங்கள் அவரை வெற்றிகரமான தலைவராக மாற்ற முயற்சித்தோம். ஆனால் அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை." எனவும் ஆசாத் ராகுல் காந்தி மீது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்திலேயே ஆசாத் ராகுல் காந்தி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.