நாட்டில் அனைவரும் அச்சத்துடன் வாழ்கின்றனர்; மத்திய அரசு மீது முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் குற்றச்சாட்டு
டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் சிறை தண்டனை பெற்று வந்த 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் குஜாராத் அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் மேலெழுந்தன.

இந்நிலையில் இது குறித்து ஆங்கில செய்தி ஊடகத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், "நாட்டில் இன்று அனைவரும் அச்சத்துடனேயே வாழந்து வருகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவில் குடிமக்கள் அச்சமின்றி வாழ முடியும் என்று உறுதியளிக்கும் அதிகாரமுள்ள யாரும் தற்போது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2002 பிப்ரவரி 27ம் தேதி குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். 2005 ஆம் ஆண்டு இது தொடர்பாக மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், தாக்குதல் நடைபெற்றதால் ரயில் தீ பிடிக்கவில்லை என்றும் தெரிவித்தது.
ஆனால் சம்பவத்தன்று, ரயில் தீப்பிடித்ததற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவ அமைப்பினர் குஜராத் முழுவதும் தாக்குதல்களை தொடங்கினர். காவல்துறையின் கட்டுப்பாடுகள் இன்றி கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. இந்த தாக்குதலுக்கு இரையானவர்களில் ஒருவர்தான் பில்கிஸ் பானு. அப்போது இவருக்கு 19 வயது. ஐந்து மாத கர்ப்பிணி. இந்நிலையில் கும்பல் ஒன்று இவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இவரது கைக்குழந்தை உட்பட குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கொன்றது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 11 பேர் சிறை தண்டனை பெற்று வந்த நிலையில், சுதந்திர தினமான கடந்த 15ம் தேதி இவர்கள் அம்மாநில அரசால் விடுவிக்கப்பட்டனர். இந்த விடுதலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆங்கில நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார்.
அதில் பில்கிஸ் பானுவுக்கு நேர்ந்த கொடுமையை குறிப்பிட்டு "நாட்டில் இன்று அனைவரும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகிறார்கள்" என்று கூறியுள்ளார். மேலும் மத்திய அரசை தீவிரமாக விமர்சித்த அவர், "பத்திரிகையாளர்கள், அதிகாரிகள், பாஜக எம்பிக்கள், அமைச்சர்கள் என அனைவரும் அச்சத்திலேயே வாழ்கிறார்கள். நீட், CUET போன்ற நுழைவுத் தேர்வுகளால் மாணவர்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள். பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகிய பிரச்சனைகளால் ஏழை, நடுத்தர மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்கள் காவல்துறையின் போலி வழக்குகளை எதிர்கொள்ள அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக பெண்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள், பழங்குடியினர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், நகைச்சுவை நடிகர்கள், கார்ட்டூனிஸ்டுகள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் பயப்படுகிறார்கள். மத்திய அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கப்பெறாமல் சிறு, குறு நடுத்தர தொழில் செய்வோரும் அச்சத்தில் உள்ளனர்.
வணிகம் செய்பவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் சிபிஐ, வருமான வரித்துறை என மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு பயந்து இருக்கின்றனர்" என சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications